
மணப்பாறை நகராட்சியின் நகர்மன்ற தலைவர் பதவியை 11 உறுப்பினர்களை கொண்ட அதிமுக 15 வாக்குகள் பெற்று கைப்பற்றியுள்ளது. 53 ஆண்டுகளாக திமுக கோட்டையாக இருந்த மணப்பாறை நகராட்சியில் முதன் முறையாக அதிமுக கைப்பற்றியுள்ளது.
திருச்சி மாவட்டம் மணப்பாறை நகராட்சியின் 7-வது நகர்மன்றத்திற்கான தேர்தல் நடந்து முடிந்து, மொத்தம் உள்ள 27 வார்டுகளில் திமுக 11, அதிமுக 11 என சமபலத்ததுடன் இருந்த நிலையில், திமுக கட்சி சார்பில் வாய்ப்பு அளிக்காததால், சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்ற 5 நபர்கள் தேர்தல் முடிவுகள் வெளியான சில மணி நேரத்திலேயே நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேருவை நேரில் சந்தித்து தங்களது ஆதரவை அவர்களாகவே முன் வந்து அளித்தனர்.
இதன் காரணமாக திமுக பலம் 16-ஆக உயர்ந்தது. அதனைத்தொடர்ந்து இன்று காலை நகராட்சி நகர்மன்ற கூட்ட அரங்கில் தேர்தல் அலுவலரும், நகராட்சி ஆணையருமான எஸ்.என்.சியாமளா முன்னிலையில் நடைபெற்ற நகர்மன்ற தலைவருக்கான முறைமுக தேர்தலில் திமுக சார்பில் 25-வது வார்டு உறுப்பினர் கீதா ஆ.மைக்கேல்ராஜ், அதிமுக சார்பில் 18-வது வார்டு உறுப்பினர் பா.சுதா ஆகியோர் வேட்பு மனுத்தாக்கல் செய்தனர். பின்னர் நடைபெற்ற வாக்களிப்புக்கு பிறகு அதிமுகவை சேர்ந்த பா.சுதா 15 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றதாகவும், 12 வாக்குகள் பெற்று கீதா ஆ.மைக்கேல்ராஜ் வெற்றியை வாய்ப்பை நழுவவிட்டார் எனவும் அறிவிக்கப்பட்டது. 11 உறுப்பினர்களை மட்டுமே கொண்ட அதிமுக 15 வாக்குகளை பெற்று வெற்றி பெற்றுள்ளது. 16 உறுப்பினர்களை கொண்ட திமுக தோல்வியை தழுவியுள்ளது.
இதில் 1969 முதல் மணப்பாறை நகராட்சியில் 53 ஆண்டுகளாக கோலூச்சி வந்த திமுக கோட்டையை தற்போது அதிமுக கைப்பற்றியுள்ளது. முன்னதாக 4 முறை நேரடியாகவும், ஒரு முறை கூட்டணி கட்சியான காங்கிரஸ் தலைமையிலும் நகர்மன்ற தலைவர் பதவியை தக்கவைத்திருந்த திமுக தற்போது நகர்மன்ற தலைவர் பதவியை இழந்துள்ளது மணப்பாறை நகராட்சியில் திருப்புமுனையாக உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.