தேனி: காங்கிரஸிற்கு ஒதுக்கீடு செய்த இடத்தில் திமுக போட்டியின்றி வெற்றி

தேனி அல்லிநகரம் நகராட்சியில் தலைவர் பதவி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்த நிலையில், அங்கு திமுக வார்டு உறுப்பினர் நகர்மன்றத் தலைவராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.
தேனி: காங்கிரஸிற்கு ஒதுக்கீடு செய்த இடத்தில் திமுக போட்டியின்றி வெற்றி
Published on
Updated on
1 min read

தேனி அல்லிநகரம் நகராட்சியில் நகர்மன்றத் தலைவர் பதவி திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்த நிலையில், அங்கு திமுக வார்டு உறுப்பினர் நகர்மன்றத் தலைவராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.

தேனி அல்லிநகரம் நகராட்சியில் மொத்தம் 33 வார்டுகள் உள்ளன. இதில் திமுக 19 வார்டுகள், அதிமுக 7 வார்டுகள், அமமுக, காங்கிரஸ், சுயேச்சை வேட்பாளர்கள் தலா 2 வார்டுகள், பாஜக ஒரு வார்டில் வெற்றி பெற்றுள்ளனர். இந்நகராட்சியில் நகர்மன்றத் தலைவர் பதவி திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது. காங்கிரஸ் கட்சி சார்பில் 22-வது வார்டு உறுப்பினர் சற்குணம் நகர்மன்றத் தலைவர் பதவிக்கு வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.

இந்த நிலையில், தேனி அல்லிநகரம் நகராட்சி அலுவலகத்தில் நகராட்சி ஆணையரும், தேர்தல் அலுவலருமான வீரமுத்துக்குமார் தலைமையில் நகர்மன்றத் தலைவர் பதவிக்கு தேர்தல் நடைபெற்றது. இதில், திமுகவைச் சேர்ந்த 19 வார்டு உறுப்பினர்கள், காங்கிரஸ், அமமுகவைச் சேர்ந்த தலா 2 வார்டு உறுப்பினர்கள், 13-வது வார்டு பாஜக உறுப்பினர் ஆனந்தி, 5-வது வார்டு அதிமுக உறுப்பினர் கிருஷ்ணபிரபா, 2 சுயேச்சை வார்டு உறுப்பினர் என மொத்தம் 27 பேர் கலந்து கொண்டனர். அதிமுக வார்டு உறுப்பினர்கள் 6 பேர் தேர்தலில் பங்கேற்கவில்லை.

காங்கிரஸ் வெளிநடப்பு

தேர்தல் நடவடிக்கை தொடங்கிய சிறிது நேரத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் நகர்மன்றத் தலைவர் பதவிக்கு வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்த சற்குணம், 14-வது வார்டுகாங்கிரஸ் உறுப்பினர் ஆ.நாகராஜ், 2-வது வார்டு சுயேச்சை உறுப்பினர் அ.சுப்புலட்சுமி ஆகியோர் தேர்தல் கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்தனர்.

அப்போது  திமுக, கூட்டணி தர்மத்திற்கு புறம்பாக செயல்படுவதாக புகார் எழுப்பி நகராட்சி அலுவலகம் முன்பு தேனி-பெரியகுளம் நெடுஞ்சாலையில் காங்கிரஸ் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

போட்டின்றித் தேர்வு

இதனிடையே, நகர்மன்றத் தலைவர் பதவிக்கு திமுக சார்பில் வேட்பு மனு தாக்கல் செய்த 10-வது வார்டு உறுப்பினர் பா.ரேணுப்பிரியா, அவரை எதிர்த்து போட்டியிட யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யாததால் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக தேர்தல் அலுவலர் அறிவித்தார்.

முன்மொழிதலுக்கு ஆளில்லை

இது குறித்து தேர்தல் அலுவலர் வீரமுத்துக்குமார் கூறுகையில், நகர்மன்றத் தலைவர் பதவிக்கு போட்டியிட உறுப்பினர்களின் முன்மொழிதல் மற்றும் வழிமொழிதலுடன் வேட்பு மனு தாக்கல் செய்ய  22-வது வார்டு காங்கிரஸ் கட்சி உறுப்பினருக்கு அவகாசம் அளிக்கப்பட்டது. அவர் வேட்பு மனு தாக்கல் செய்வில்லை. பின்னர், 10-வது வார்டு திமுக உறுப்பினர் வேட்பு மனு தாக்கல் செய்தார். தலைவர் பதவிக்கு வேறு யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யாததால், அவர் போடட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com