கோவில்பட்டி: தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியையடுத்த கழுகுமலை அருள்மிகு கழுகாசலமூர்த்தி கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழா புதன்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இக்கோயிலின் பங்குனி உத்திரத் திருவிழாவை முன்னிட்டு திங்கள்கிழமை ராஜஅனுக்ஞையும், செவ்வாய்க்கிழமை தேவஅனுக்ஞையும் நடைபெற்றது.
புதன்கிழமை கொடியேற்று விழாவை முன்னிட்டு கோயில் நடை அதிகாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து, திருவனந்தல் மற்றும் திருப்பள்ளி எழுச்சி பூஜைகள் நடைபெற்றன. பின்னர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனை நடைபெற்றது.
பின்னர் காலை 6.45 மணிக்கு மேல் கொடியேற்றம் நிகழ்ச்சியும், அதைத் தொடர்ந்து கொடி மரம், நந்தி, பலிபீடம் ஆகியவற்றிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகளும் நடைபெற்றன.
திருவிழா நாள்களில் தினமும் சுவாமி வீதியுலா நடைபெறும்.
9 ஆம் திருநாளான மார்ச் 17 ஆம் தேதி காலை 7 மணிக்கு சுவாமி தேருக்கு செல்லுதல் நிகழ்ச்சியும், 10.30 மணிக்கு மேல் தேரோட்டமும் நடைபெறும். 18 ஆம் தேதி இரவு 8 மணிக்கு தவசுக் காட்சியும், 19 ஆம் தேதி இரவு 7.35 மணிக்கு மேல் திருக்கல்யாணமும் நடைபெறும்.
கொடியேற்று நிகழ்ச்சியில் கோயில் நிர்வாக அதிகாரி கார்த்தீஸ்வரன், சமூக ஆர்வலர்கள் முருகன உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
இதையும் படிக்க | குடும்பத் தலைவிகள் பெயரில் அரசு வீடுகள்: முதல்வா் அறிவிப்பு