மானாமதுரை: சிவகங்கை மாவட்டம், மானாமதுரை பகுதியில் உள்ள முருகன் கோயில்களில் வெள்ளிக்கிழமை பங்குனி உத்திர விழா சிறப்பாக நடைபெற்றது.
மானாமதுரை புறவழிச் சாலையில் அமைந்துள்ள வள்ளி தெய்வானை சமேத ஸ்ரீ வழிவிடு முருகன் கோயிலில் நடைபெற்ற பங்குனி உத்திர விழாவை முன்னிட்டு கோயிலில் காலையில் கலச நீர் வைத்து யாகம் வளர்க்கப்பட்டது. அதன்பின் மூலவருக்கும் உற்சவருக்கும் கலச நீரால் அபிஷேகம் நடத்தி சிறப்பு பூஜைகள், தீபாராதனை நடைபெற்றன.
அதைத்தொடர்ந்து மூலவர் வெள்ளிக்கவசம் அலங்காரத்திலும் உற்சவர் மயில் வாகனத்திலும் எழுந்தருளி அருள்பாலித்தனர். திரளான பக்தர்கள் கோயிலுக்கு வந்து வழிவிடு முருகனை தரிசனம் செய்தனர். மதியம் கோயிலில் நடைபெற்ற அன்னதானத்தில் ஏராளமானோர் பங்கேற்றனர்.
மானாமதுரை வழிவிடு முருகன் கோயிலில் நடைபெற்ற பங்குனி உத்திர விழாவில் மயில் வாகனத்தில் எழுந்தருளிய உற்சவர்.
மானாமதுரை அருகே கால் பிரிவு கிராமத்தில் எழுந்தருளி அருள் பாலிக்கும் ஸ்ரீ செல்வ முருகன் கோயிலில் நடைபெற்ற பங்குனி உத்திர விழாவை முன்னிட்டு காப்புக்கட்டி விரதம் இருந்து வந்த பக்தர்கள் பால்குடம் சுமந்து கோயிலுக்கு வந்தனர். அதன் பின்னர் வள்ளி தெய்வானை சமேத செல்வ முருகனுக்கு அபிஷேகப் பொருள்களால் அபிஷேகம் நடத்தி சிறப்பு அலங்காரம் செய்து பூஜைகள் தீபாராதனைகள் நடை பெற்றன.
அதைத்தொடர்ந்து கோயிலில் நடைபெற்ற அன்னதானத்தில் திரளானோர் பங்கேற்றனர். செல்வமுருகன் கோயில் பங்குனி உத்திர விழாவில் மானாமதுரை நகராட்சித் தலைவர் எஸ். மாரியப்பன் கென்னடி, ஒன்றியத் தலைவர் லதா, துணைத் தலைவர் பாலசுந்தரம், நகராட்சி ஆணையர் கண்ணன், நகராட்சி வார்டு உறுப்பினர்கள் சோம. சதீஷ்குமார், இந்துமதி திருமுருகன், பி. புருஷோத்தமன், மானாமதுரை தொகுதி காங்கிரஸ் பொறுப்பாளர் ஏ.சி. சஞ்சய் உள்ளிட்ட மானாமதுரை பகுதி முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர்.
விழாவிற்கான ஏற்பாடுகளை செல்வ முருகன் கோயில் நிர்வாகி ஏ. ஆர். பி. முருகேசன் செய்திருந்தார்.
இதேபோல் மானாமதுரை பகுதியில் உள்ள பல்வேறு முருகன் கோயில்களிலும் பங்குனி உத்திர விழா சிறப்பாக நடைபெற்றது.