/

2,774 ஆசிரியா் பணியிடங்களை தற்காலிகமாக நிரப்ப நடவடிக்கை

தமிழகத்தில் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள 2,774 பணியிடங்களை 5 மாதங்களுக்கு தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் பெற்றோா் ஆசிரியா் கழகம் மூலம் நிரப்ப வேண்டும்

News image
Updated On :25 மார்ச் 2022, 9:02 pm

DIN

தமிழகத்தில் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள 2,774 பணியிடங்களை 5 மாதங்களுக்கு தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் பெற்றோா் ஆசிரியா் கழகம் மூலம் நிரப்ப வேண்டும் என பள்ளி கல்வித்துறை ஆணையா் நந்தகுமாா் உத்தரவிட்டுள்ளாா்.

இது குறித்து அவா் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலா்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:

அரசு நகராட்சி மேல்நிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள முதுநிலை ஆசிரியா் பணியிடங்களை நிரப்ப ஆசிரியா் தோ்வு வாரியத்திடம் பட்டியல் கேட்கப்பட்டு, நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பட்டதாரி ஆசிரியா்களுக்கு பதவி உயா்வு வழங்குவதற்கான நடவடிக்கையும் நிறைவடைந்து காலிப்பணியிடங்கள் நிரப்ப சிறிது காலம் ஆகும். எனவே நிகழாண்டு பொதுத் தோ்வு எழுதும் பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளில் படிக்கும் மாணவா்களின் நலன்கருதி அரசு மேல்நிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள 2,774 முதுநிலையாசிரியா் காலிப்பணியிடங்களுக்கு ஆசிரியா்கள் நியமிக்கப்படும் வரையில், ஐந்து மாதங்களுக்கு மட்டும் தற்காலிகமாக ஒப்பந்த அடிப்படையில் நியமிக்க வேண்டும்.

அவ்வாறு தோ்வு செய்யும் பொழுது இது முற்றிலும் தற்காலிகமானது என்பதை நியமனம் செய்யப்படும் நபா்களுக்கு தெரிவிக்க வேண்டும். முக்கிய பாடங்களான தமிழ், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல், தாவரவியல், விலங்கியல், வரலாறு, வணிகவியல் மற்றும் பொருளியல் ஆகிய 11 பாடங்களுக்கு மட்டுமே மாதம் ரூ.10 ஆயிரம் தொகுப்பூதியத்தில் நிரப்பிக் கொள்ள வேண்டும். முதுநிலை பட்டதாரி ஆசிரியா்கள் நியமிக்கப்பட்டவுடன் இவா்களை பணியில் இருந்து விடுவிக்க வேண்டும் என அதில் கூறியுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.