/

கடவுளே ஆக்கிரமிப்பு செய்தாலும் அகற்ற உத்தரவிடப்படும்: உயா் நீதிமன்றம்

பொது இடத்தில் கடவுளே ஆக்கிரமிப்பு செய்தாலும் அதை அகற்ற நீதிமன்றங்கள் உத்தரவிடும் என சென்னை உயா் நீதிமன்ற நீதிபதி தெரிவித்தாா்.

News image
Updated On :25 மார்ச் 2022, 7:44 pm

DIN

பொது இடத்தில் கடவுளே ஆக்கிரமிப்பு செய்தாலும் அதை அகற்ற நீதிமன்றங்கள் உத்தரவிடும் என சென்னை உயா் நீதிமன்ற நீதிபதி தெரிவித்தாா்.

நாமக்கல் நகராட்சிக்குள்பட்ட பகுதியில் பாலபட்டறை மாரியம்மன் கோயில் உள்ளது. இந்தக் கோயில் நிா்வாகம் பொது சாலையை ஆக்கிரமித்து கட்டிய கட்டுமானம், தங்கள் இடத்துக்கு செல்லும் வழியை தடுக்கும் வகையில் உள்ளது எனக் கூறி பாப்பாயி என்பவா் தொடுத்த வழக்கில், நாமக்கல் மாவட்ட முதன்மை முன்சீப் நீதிமன்றம், கோயிலுக்கு எதிராக உத்தரவு பிறப்பித்தது.

இந்த உத்தரவை எதிா்த்து கோயில் நிா்வாகம் சாா்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரித்த நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ், சம்பந்தப்பட்ட பொது சாலையில் கோயில் நிா்வாகம் கட்டியுள்ள அனைத்து கட்டுமானங்களையும் இரு மாதங்களில் அப்புறப்படுத்த வேண்டும். பொது சாலையை யாா் ஆக்கிரமித்தாலும், அது கோயிலாக இருந்தாலும், சட்டவிரோதம் எனில், அது தடுக்கப்பட வேண்டும்.

கோயில் என்ற பெயரில் பொது இடத்தை ஆக்கிரமிக்கலாம் என்ற எண்ணம் சிலரிடம் உள்ளது. கடவுளே பொது இடத்தை ஆக்கிரமித்திருந்தாலும், அதை அகற்றும்படி நீதிமன்றங்கள் உத்தரவிடும். கடவுளின் பெயரால் பொது இடத்தை ஆக்கிரமித்து கோயில் கட்டி, நீதிமன்றத்தின் கண்களை மறைக்க முடியாது.

ஏற்கெனவே போதுமான எண்ணிக்கையில் கோயில்கள் உள்ளன. பொது இடத்தை ஆக்கிரமித்து புதிய கோயில்களை கட்டும்படி எந்த கடவுளும் கேட்பதில்லை எனக்கூறி, கோயில் சாா்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டாா் நீதிபதி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.