வன்னியர்களுக்கு 10.5 சதவிகித இடஒதுக்கீடு விவகாரத்தில் உச்சநீதிமன்றம் நாளை (மார்ச் 30) தீர்ப்பளிக்கவுள்ளது.
வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கப்பட்டது செல்லாது என்று உயர்நீதிமன்றம் அறிவித்த நிலையில், அதற்கு எதிரான உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கின் விசாரணைகள் நிறைவடைந்த நிலையில், உச்சநீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கவுள்ளது.
கல்வி, அரசு வேலைவாய்ப்பில் மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீா்மரபினருக்கான 20 சதவீதம் இடஒதுக்கீட்டில், வன்னியா்களுக்கு 10.5 சதவீதம் உள்ஒதுக்கீடு அளிக்கும் வகையில் அதிமுக அரசு சட்டத்தை இயற்றி அரசாணை வெளியிட்டது.
இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், உள்ஒதுக்கீடு அரசியல் அமைப்பிற்கு எதிரானது என கூறி தமிழக அரசின் அரசாணையை ரத்து செய்தது.
இந்தத் தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு, பாமக சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் கடந்த மாதம் நிறைவடைந்த நிலையில், தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், இந்த வழக்கில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் ராகேஸ்வர ராவ், பி.ஆர்.கவாய் அமர்வு நாளை தீர்ப்பு வழங்க உள்ளது.