
வன்னியர்களுக்கான 10.5% உள்இடஒதுக்கீடு ரத்து செய்யப்பட்ட விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு ஏமாற்றம் அளிக்கிறது என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
வன்னியர்கல்வி, அரசு வேலைவாய்ப்பு ஆகியவற்றில் மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினருக்கான 20 சதவீதம் இடஒதுக்கீட்டில், வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் உள்ஒதுக்கீடு அளிக்கும் வகையில், தமிழக அரசு கொண்டு வந்து நிறைவேற்றிய சட்டத்தை ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிரான மேல்முறையீட்டு மனுக்கள் மீதான தீர்ப்பில், தமிழக அரசின் மேல் முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து பாமக இளைஞரணித் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான அன்புமணி கருத்து தெரிவித்துள்ளார். இதில், வன்னியர் உள்இடஒதுக்கீடு தீர்ப்பு ஏமாற்றம் அளித்தாலும், இது தொடக்கம்தான்.
தமிழ்நாடு அரசு ஆணையம் ஒன்றை அமைத்து புள்ளிவிவரங்களை திரட்டி மீண்டும் சட்டம் கொண்டு வர வேண்டும்.
வன்னியர் உள்இடஒதுக்கீட்டு சட்டம் செல்லாது என்று உயர்நீதிமன்றம் கூறிய 7 காரணங்களில் 6 காரணத்தை உச்ச நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
வன்னியர் உள்இடஒதுக்கீடு வழக்கில் உயர்நீதிமன்ற தீர்ப்பை உச்ச நீதிமன்றம் அப்படியே ஏற்கவில்லை.
குடியரசுத் தலைவரிடம் ஒப்புதல் வாங்க வேண்டும் என்ற கருத்தை நிராகரித்துள்ளது. உள்ஒதுக்கீடு வழங்க மாநில அரசுக்கு உரிமை உண்டு என்பதையும் ஏற்றுக்கொண்டுள்ளது.
வன்னியர் உள்இடஒதுக்கீடு தொடர்பான பாமகவின் போராட்டம் தொடரும். போதுமான தரவுகள் இல்லாததே தீர்ப்பு சாதகமாக இல்லாததற்கு காரணம் என்று அன்புமணி கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.