இலங்கை மக்களுக்கு உதவிட வேண்டும் என்ற தமிழ்நாட்டின் கோரிக்கையை ஏற்றுக் கொண்டதற்காக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.
கடும் பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கைக்கு தமிழக அரசு உதவ மத்திய அரசு அனுமதிக்கக் கோரி தமிழக சட்டப்பேரவையில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதற்குப் பதிலளிக்கும் வகையில் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கா், முதல்வா் ஸ்டாலினுக்கு எழுதிய கடிதத்தில், மத்திய அரசு மூலமே இலங்கைக்கு உதவிகளை வழங்க முடியும் எனத் தெரிவித்துள்ளாா். முன்னதாக தீர்மானம் தொடர்பாகவும் முதல்வர், அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியிருந்தார்.
இதையடுத்து, இலங்கை மக்களுக்கு உதவிட வேண்டும் என்ற தமிழ்நாட்டின் கோரிக்கையை ஏற்றுக் கொண்டதற்காக நன்றி தெரிவித்து அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
'இலங்கை மக்களுக்கு உதவ வேண்டும் என்ற தமிழ்நாட்டின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டதற்காக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் டாக்டர் எஸ். ஜெய்சங்கருக்கு தனிப்பட்ட முறையில் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த மனிதாபிமான செய்கை அனைவராலும் பெரிதும் வரவேற்கப்படும் மற்றும் நாடுகளுக்கு இடையே புரிதல் மற்றும் நல்லுறவை மேம்படுத்த உதவும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். அனைத்துத் துறைகளிலும் நல்லெண்ணம் வளரட்டும்' என்று பதிவிட்டுள்ளார்.