வண்டலூர் உயிரியல் பூங்காவில் உள்ள வெள்ளைப் புலிக்கு சிகிச்சை அளிக்க முயன்றபோது பராமரிப்பாளரை தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை அடுத்துள்ள வண்டலூர் உயிரியல் பூங்காவில் நகுலன் என்ற ஆண் வெள்ளைப் புலி இருக்கின்றது. கடந்த சில நாள்களாகவே சரியாக உணவு எடுத்துக் கொள்ளாமல் உடல்நலக் குறைவுடன் காணப்பட்டது.
இதனை தொடர்ந்து, மருத்துவக் குழுவிற்கு தகவல் அளிக்கப்பட்டு வெள்ளைப் புலியை கூண்டில் அடைத்து கண்காணித்து வந்துள்ளனர். இன்று புலிக்கு பரிசோதனை செய்வதற்காக பராமரிப்பாளர் செல்லையா உதவியுடன் மருத்துவக் குழுவினர் சென்றுள்ளனர்.
அப்போது, எதிர்பாராத விதமாக பராமரிப்பாளர் செல்லையாவை வெள்ளைப் புலி தாக்கியுள்ளது. இதில், காயமடைந்த பராமரிப்பாளர் உடனடியாக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து, சிகிச்சைக்கு பிறகு வீடு திரும்பியுள்ளார்.
வண்டலூர் பூங்காவில் பராமரிப்பாளரையே வெள்ளைப் புலி தாக்கியதால், பரபரப்பான சூழல் காணப்படுகிறது.