காவிரியின் நீர் பிடிப்புப் பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக, மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து அணையின் நீர்மட்டம் மளமளவென உயர்ந்து நேற்று காலை அணையின் நீர்மட்டம் 117.76 அடியாக உயர்ந்தது.
அணைக்கு வினாடிக்கு 10,508 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. நீர் வரத்தும் இருப்பும் திருப்திகரமாக இருந்ததால் டெல்டா விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று நாற்றங்கால் விடுவதற்கு ஏதுவாக நேற்று காலை டெல்டா பாசனத்திற்கு தமிழக முதல்வர் தண்ணீர் திறந்து வைத்தார்.
தொடக்கத்தில் வினாடிக்கு 3 ஆயிரம் கன அடியாக அ திறக்கப்பட்ட நீரின் அளவு வினாடிக்கு பத்தாயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டது.
நேற்று இரவு எட்டு மணி முதல் தண்ணீர் திறப்பு வினாடிக்கு 5,000 கன அடியாக குறைக்கப்பட்டது.
இந்நிலையில், காவிரியின் நீர்பிடிப்புப் பகுதிகளில் மழை தணிந்து வருவதால் இன்று காலை மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 8539 கன அடியாக குறைந்தது.
நீர்வரத்து குறைந்தாலும் அணைக்கு வரும் நீரின் அளவைவிட பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு குறைவாக இருப்பதால் நேற்று காலை 117.76 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று காலை 117.92 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் நீர் இருப்பு 90.19 டி.எம்.சி ஆக உள்ளது. அணையிலிருந்து டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 5,000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
இதையும் படிக்க | வீரப்பன் சகோதரர் மாதையன் காலமானார்