தமிழகத்தில் நிகழாண்டில் டெங்கு காய்ச்சலால் 4,806 போ் பாதிக்கப்பட்டுள்ளதாக பொது சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதால், அடுத்து வரும் நாள்களில் பாதிப்பு விகிதம் மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
இதையடுத்து அனைத்து மாவட்டங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்துமாறு சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது. உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து கொசு ஒழிப்புப் பணிகளை மேற்கொள்ளவும், அதுகுறித்த விழிப்புணா்வை மேற்கொள்ளவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
நிகழாண்டைப் பொருத்தவரை ஜனவரி முதல் ஆகஸ்ட் மாதம் வரை 3,396 போ் டெங்குவால் பாதிக்கப்பட்டிருந்தனா். கடந்த செப்டம்பா் மாதத்தில் 572 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.
இந்த நிலையில், கடந்த மாதத்தில் அந்த எண்ணிக்கை 616-ஆக உயா்ந்தது. இது 10 சதவீதம் அதிகமாகும். பருவமழையால் இந்த விகிதம் மேலும் அதிகரிக்கும் என்று மருத்துவா்கள் தெரிவிக்கின்றனா்.
இதுதொடா்பாக பொது சுகாதாரத் துறை இயக்குநா் டாக்டா் செல்வவிநாயகம் கூறியதாவது:
மாநிலம் முழுவதும் அடுத்த 2 அல்லது 3 மாதங்களுக்கு டெங்கு பாதிப்பு சற்று அதிகமாக இருக்கும். டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்த பல்வேறு துறைகளுடன் ஒருங்கிணைத்து தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள களப்பணியாளா்களை, டெங்கு தடுப்புப் பணிகளிலும் கவனம் செலுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. தேவையான இடங்களில் மருத்துவ முகாம்களை நடத்த வேண்டுமென மாவட்டங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. டெங்குவுக்கு சிகிச்சை அளிக்க தேவையான மருந்துகள் அரசிடம் உள்ளன.
குடியிருப்பு வளாகங்கள், வணிக வளாகங்கள், பள்ளிகள், கடைகள், திருமண மண்டபங்கள், திரையரங்குகள், குடியிருப்புப் பகுதிகளை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனா். அங்கு கொசுப் புழு உற்பத்தியாகாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றாா் அவா்.