போடி: போடி அருகே அரசு டாஸ்மாக் மதுக்கடையை அகற்றக்கோரி அரசு பொறியியல் கல்லூரி மாணவர்கள் வியாழக்கிழமை வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போடி மேலச்சொக்கநாதபுரத்தில் அரசு பொறியியல் கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியை சேர்ந்த மாணவர்களுக்கு தனியாக விடுதி போடி சிலமலை செல்லும் ராணி மங்கம்மாள் சாலையில் அமைந்துள்ளது. இந்த சாலையில் அரசு டாஸ்மாக் மதுக்கடையும் அமைந்துள்ளது. டாஸ்மாக் மதுக்கடைக்கு வருகின்றவர்கள் மது அருந்திவிட்டு பொறியியல் கல்லூரி மாணவர் விடுதியில் தங்கியிருக்கும் மாணவர்களுடன் தகராறு செய்து தாக்கி விடுகின்றனர்.
மேலும், இப்பகுதியில் கூச்சலிட்டு மாணவர்களுக்கு இடையூறு செய்வதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். இதுபோன்ற செயல்களை தடுக்க இப்பகுதியில் உள்ள அரசு டாஸ்மாக் மதுக்கடையை அகற்ற வலியுறுத்தி மாணவர்கள் பலமுறை கோரிக்கை வைத்தும் நடவடிக்கை இல்லாததால் வியாழக்கிழமை அரசு பொறியியல் கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி முன் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து அங்கு வந்த போடி தாலுகா காவல் ஆய்வாளர் ரமேஷ்குமார், அரசு பொறியியல் கல்லூரி முதல்வர் திருநாவுக்கரசு, மேலச்சொக்கநாதபுரம் பேரூராட்சி தலைவர் கண்ணன் மற்றும் போலீசார், பேராசிரியர்கள் மாணவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.