திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி வட்டத்துக்கு உள்பட்ட சர்க்கார் பெரியபாளையம் ரிசர்வ் பகுதியில் கடந்த சில மாதங்களாக விநாயகர் கோவில் ஒன்று அமைக்கப்பட்டது.
அங்கு ஏராளமான பொது மக்கள் வழிபாடு நடத்தி வந்தனர் . ரிசர்வ் பகுதியில் அமைக்கப்பட்டிருப்பதன் காரணமாக இன்று காலை வருவாய்த்துறையினர் கோயிலை அப்புறப்படுத்தி விநாயகர் சிலையை எடுத்துச் சென்றனர் . இதை அறிந்த இந்து முன்னணியினர் ஏராளமானோர் கோயில் இடிக்கப்பட்ட இடத்தில் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்பகுதி பொதுமக்களிடம் எந்த ஒரு முன்னறிவிப்பும் இல்லாமல் கோயில் இடிக்கப்பட்டதாக குற்றம்சாட்டியும், கோயிலில் இருந்து அகற்றப்பட்ட விநாயகர் சிலையை உடனடியாக ஒப்படைக்க வேண்டும் என வலியுறுத்தி இந்து முன்னணியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியும் இந்து முன்னணியினர் போராட்டத்தை கைவிடாததால் அசம்பாவித சம்பவங்களை தவிர்க்க 300-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
மேலும் இது குறித்து ஊத்துக்குளி வட்டாட்சியர் மற்றும் வருவாய் துறையினர், போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இந்து முன்னணி அமைப்பினருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
நாளை காலை மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் அமைதி பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட பின்பு விநாயகர் சிலை ஒப்படைக்கப்படும் என வட்டாட்சியர் கூறிய நிலையில் அதை ஏற்றுக் கொள்ளாத இந்து முன்னணியினர் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் திருப்பூர் ஊத்துக்குளி பிரதான சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.