துறையூர்: துறையூர் பேருந்து நிலைய வளாகத்தை ஆக்கிரமித்துக் கடைகள் வைத்திருந்ததாக கூறி நகராட்சி நிர்வாகத்தினர் போலீஸார் உதவியுடன் ஆக்கிரமிப்புகளை அகற்றினர்.
துறையூர் நகர்மன்றக் கூட்டம் அக். 31 நடைபெற்ற போதும், அதற்கு முன்னர் நடந்த போதும் பேருந்து நிலைய வளாகம் நகராட்சி அனுமதியின்றி கடைகளை போட்டு ஆக்கிரமிக்கப்பட்டிருப்பதாகவும், இதனால் பேருந்து நிலையம் வருகிற பயணிகளுக்கு அசெளகரியம் ஏற்பட்டிருப்பதாகவும், கூட்ட நேரத்தில் நெருக்கமாக நின்று பேருந்துக்கு காத்திருக்கும் பயணிகள் குறிப்பாக பெண்கள் மற்றும் முதியவர்கள் அவதிப்படுவதாகவும், திருட்டு உள்ளிட்ட குற்ற சம்பவங்களுக்கு இலக்காவதாகவும் கூறி ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தி வந்தனர்.
இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை நகராட்சி ஆணையர்(பொ) நாகராஜ், கட்டட ஆய்வாளர் பாலசுப்ரமணியன், வருவாய் ஆய்வர் வெள்ளைத்துரை உள்ளிட்ட அலுவலர்கள், காவல் துறையினர் பாதுகாப்புடன் தூய்மைப் பணியாளர்களைக் கொண்டு பேருந்து நிலையத்தில் அனுமதியின்றி ஆக்கிரமித்திருந்த பழக்கடை, தேநீர் கடை உள்ளிட்டவைகளை அகற்றினர்.
இதனால் பாதிக்கப்பட்டவர்கள் தங்களுக்கு நகராட்சி நிர்வாகம் எழுத்துப்பூர்வமாக அறிவிப்பு எதுவும் வழங்காமல் திடீரென ஆக்கிரமிப்பை அகற்றியதால் தங்களுக்கு வருவாய் இழப்பும், விற்பனை மூலப்பொருள் நட்டமும் ஏற்பட்டிருப்பதாக கூறி புலம்பினர்.