டிபிஐ வளாகத்தில் அன்பழகனுக்கு சிலை அமைக்க பாஜக கடும் எதிர்ப்பு!

பள்ளிக்கல்வித் துறை வளாகத்தில் முன்னாள் அமைச்சர் அன்பழகனுக்கு சிலை அமைப்பதற்கு தமிழக பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. 
டிபிஐ வளாகத்தில் அன்பழகனுக்கு சிலை அமைக்க பாஜக கடும் எதிர்ப்பு!
Published on
Updated on
1 min read

பள்ளிக்கல்வித் துறை வளாகத்தில் முன்னாள் அமைச்சர் அன்பழகனுக்கு சிலை அமைப்பதற்கு தமிழக பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. 

மேலும் அரசு அலுவலகத்தில் தலைவர்களுக்கு சிலை அமைப்பதைக் கைவிட்டு 'தலைவர்களின் பூங்கா' ஒன்றை உருவாக்கி அங்கே தலைவர்களின் சிலைகளை நிறுவ வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது. 

இதுகுறித்து தமிழக பாஜக துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி தனது ட்விட்டர் பக்கத்தில், 'தமிழக பள்ளிக்கல்வித் துறை அலுவலகங்கள் இயங்கும் கல்லூரி சாலையில், டிபிஐ வளாகத்தில் முன்னாள் கல்வி அமைச்சரும், திமுகவின் தலைவர்களில் ஒருவருமான அன்பழகனுக்கு சிலை நிறுவும் பணிகள் துவங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

"2013 உச்சநீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் தமிழகத்தில் பொது இடங்களில் எந்த சிலை நிறுவவும் தமிழக அரசு அனுமதியளிக்கவில்லை" என்று கடந்த 23.01.2022 அன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நல வழக்கு ஒன்றில் தலைமைச் செயலாளர் இறையன்பு தமிழக அரசின் சார்பில் வாக்குமூலத்தை தாக்கல் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

"சாலைகளிலோ, நடைபாதைகளிலோ, பொதுமக்களின் பயன்பாட்டில் உள்ள பொது இடங்களிலோ இனி சிலைகள் வைப்பதற்கு மாநிலங்கள் அனுமதியளிக்கக்கூடாது" என்று உச்சநீதிமன்றம் ஜனவரி 18, 2013 அன்று அளித்த தீர்ப்பின்படி, அரசு அலுவலகங்கள் பொது மக்களின் பயன்பாட்டில் உள்ள இடங்கள் என்பதை உணர்ந்து நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக கல்வித்துறை வளாகத்தில் முன்னாள் அமைச்சர் அன்பழகனின் சிலையை நிறுவும் முயற்சியினை தமிழக அரசு கைவிட வேண்டும்.

மேலும், அக்டோபர் 7,2021 அன்று சென்னை உயர்நீதிமன்றத்தின் நீதியரசர் எம்.சுப்பிரமணியன் வழங்கிய தீர்ப்பில், பொது இடங்கள், சாலைகள் மற்றும் அரசு நிலங்களில் இனி சிலைகள் அமைக்க அனுமதியளிக்கக்கூடாது என்று உள்துறை செயலாளருக்கு உத்தரவிட்டதை அரசு மறந்து விடக்கூடாது. இனி அரசு அலுவலகங்கள் உள்ளிட்ட பொது இடங்களில் அரசியல் கட்சிகளின் சிலைகள் வைப்பதை முற்றிலுமாக நிறுத்த வேண்டும்.

மேலும், அதே தீரப்பில், பொது இடங்களில் உள்ள தலைவர்களின் சிலைகள் அனைத்தையும் அகற்றிவிட்டு 'தலைவர்களின் பூங்கா' ஒன்றை உருவாக்கி அங்கே தலைவர்களின் சிலைகளை நிறுவ வேண்டும் என்ற உத்தரவையும் செயல்படுத்த அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்' என்று குறிப்பிட்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com