கம்பம்: தேனி மாவட்டம் கூடலூரில் 5 நாட்களுக்குப் பிறகு தொழிலாளியின் உடல் முல்லைப் பெரியாற்றில் இருந்து திங்கள்கிழமை மீட்கப்பட்டது.
தேனி மாவட்டம் கூடலூர் சுல்லக்கரையைச் சேர்ந்தவர் பாண்டியன் மகன் சிவா (32), கட்டடத் தொழிலாளி, இவருக்கு திருமணமாகி மனைவியுடன் கருத்து வேறுபாடால் விவாகரத்து பெற்று தனது தாயாருடன் வசித்து வந்தார்.
கடந்த அக்.6 ல் உடன் வேலை பார்க்கும் நண்பர் பரமசிவத்துடன் சேர்ந்து காஞ்சிமரத்துரை பாலம் அருகே உள்ள முல்லைப் பெரியாற்றில் குளிக்க சென்றார். ஆற்றின் குறுக்கே நீந்திச் சென்ற போது, தண்ணீரால் இழுத்து செல்லப்பட்டார்.
பின்னர் குமுளி காவல் நிலைய போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர் மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.
உடல் கிடைக்காததால் ஞாயிற்றுக்கிழமை சிவாவின் உறவினர்கள் புறவழிச்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். பின்னர் போலீசார் சமாதானப்படுத்தி அவர்களை அனுப்பிவைத்தனர்.
தொடர்ந்து, திங்கள்கிழமை மீட்புப் பணியில் ஈடுபடுவதற்கு முன் அருகே உள்ள சிறு புனல் மின்திட்ட மதகை திறந்து தேங்கியுள்ள தண்ணீரை வெளியேற்றினர்.
அப்போது காஞ்சிமரத்துரை பாலம் கீழ்புறம் உள்ள மரக்கிளையில் சிவாவின் உடல் சிக்கியிருந்தது. பின் உடலை மீட்டு கம்பம் அரசு மருத்துவமனையில் உடற்கூறு பரிசோதனைக்கு ஒப்படைத்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.