தமிழ்நாட்டில், சிவகாசியைச் சுற்றியுள்ள லட்சக்கணக்கான மக்களின்
வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு, விதிகளுக்குட்பட்டு பட்டாசுகளின் விற்பனையை தில்லியில் அனுமதிக்க வேண்டும் என தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவாலுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
இது தொடர்பாக அரவிந்த் கேஜரிவாலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின்படி, பண்டிகை காலங்களில் இரண்டு மணி நேரம் பட்டாசு வெடிக்க அனுமதிக்கப்படுகிறது.
பண்டிகைக் கால கொண்டாட்டத்தின் அடையாளமாக பட்டாசுகளை வெடிப்பது என்பது சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதில் முனைப்புடன் செயல்படும் நாடுகள் உள்ளிட்ட சர்வதேச நாடுகளில் ஏற்றுக்கொள்ளப்பட்ட நடைமுறைதான்.
இந்திய நகரங்களில் காற்று மாசுபாட்டிற்குப் பங்களிக்கும்
காரணிகளாக வாகனங்கள் மற்றும் தொழில்துறை உமிழ்வுகள் இருக்கின்றன.
ஒருசில நாட்களுக்குப் பயன்படுத்தப்படும் பட்டாசுகளால் மிகக்குறைந்த அளவிலான மாசு ஏற்படும் என்பதால், பட்டாசு உற்பத்தியில் ஈடுபடுவோரின் வாழ்வாதாரத்தினைக் கருத்தில்கொண்டு, உரிமம் பெற்ற வணிகர்கள் மூலம் அறிவியல் முறைப்படி உருவாக்கப்பட்ட பசுமைப் பட்டாசுகளை விற்பனை செய்ய உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
வேறு எந்த மாநிலமும் பட்டாசுக்கு முழுமையாகத் தடை விதிக்காதபோது, தில்லியில் தடை விதிக்கப்பட்டிருப்பதைச் சுட்டிக்காட்டியுள்ளார்.
தில்லி முதல்வர் இந்த நடவடிக்கையை நீக்குவதன் மூலமாக, தமிழ்நாட்டில், சிவகாசியைச் சுற்றியுள்ள லட்சக்கணக்கான
மக்கள், குறிப்பாக வாழ்வாதாரத்திற்காக இந்தத் தொழிலை நம்பியிருக்கும் கிராமப்புற பெண்களின் வாழ்க்கையில் ஒளியேற்றிட இயலும். இதனால், விதிமுறைகளுக்கு உட்பட்ட பட்டாசுகளின் விற்பனையை தில்லியில் அனுமதிக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.