கூடலூரில் நெல் கொள்முதல் நிலையம் திறக்க தாமதம்: தனியாரிடம் விற்கும் விவசாயிகள்!

தேனி மாவட்டம் கூடலூரில் அரசு நெல் கொள்முதல் நிலையத்தை தொடங்காததால் விவசாயிகள்  அறுவடை செய்த நெல்லை மிக குறைந்த விலைக்கு தனியாரிடம் விற்பனை செய்து வருகின்றனர்.
தேனி மாவட்டம் கூடலூரில் சாலையில் நெல்லை குவித்து வியாபாரிகளுக்கு விற்பனை செய்யும் விவசாயிகள்.
தேனி மாவட்டம் கூடலூரில் சாலையில் நெல்லை குவித்து வியாபாரிகளுக்கு விற்பனை செய்யும் விவசாயிகள்.


கம்பம்: தேனி மாவட்டம் கூடலூரில் அரசு நெல் கொள்முதல் நிலையத்தை தொடங்காததால் விவசாயிகள்  அறுவடை செய்த நெல்லை மிக குறைந்த விலைக்கு தனியாரிடம் விற்பனை செய்து வருகின்றனர்.

தேனி மாவட்டம், கூடலூர் பகுதியில் முதல் போக சாகுபடிக்கான அறுவடை நடைபெற்று வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன் பாரதிய கிசான் சங்கம், முல்லைச்சாரல் விவசாய சங்கத்தினர் கூடலூரில் நெல் கொள்முதல் நிலையம் அரசுக்கு சொந்தமான இடத்தில் தொடங்க வேண்டும் என்று ஆட்சியரிடம் கோரிக்கை மனு கொடுத்தனர்.

அதன் பேரில் ஆட்சியர் முரளிதரன் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான இடத்தில் ஆய்வு நடத்தி அங்கு தொடங்க ஏற்பாடு செய்யப்படும் என்றார். அதற்காக அதிகாரிகளிடம் கேட்டு கொண்டார்.

இந்நிலையில், தற்போது கூடலூர் பகுதிகளில் நெல் அறுவடை தொடங்கி உள்ளது. அறுவடை செய்த நெல்லை விவசாயிகள் கூடலூர் சாலையில் குவித்து தனியார் வியாபாரிகளுக்கு விற்பனை செய்து வருகின்றனர், காரணம் கேட்டால் அரசு கொள்முதல் நிலையம் தொடங்க வில்லை என்றனர்.

இதுபற்றி பாரதிய கிசான் சங்க மாவட்ட தலைவர் எம்.சதீஷ்பாபு கூறியது,  அரசு நேரடி நெல்கொள்முதல் நிலையங்களில் ஒரு  கிலோவுக்கு ரூ. 21.60 ஆக நிர்ணயம் செய்துள்ளது. ஆனால், வியாபாரிகள் கிலோ ரூ.15 முதல் 17 வரை விவசாயிகளிடம் நெல் கொள்முதல் செய்கின்றனர். இதனால் விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்படுகிறது, ஆட்சியர் கொள்முதல் நிலையத்தை உடனே தொடங்க வேண்டும் என்றார்.

விவசாயிகள் அரசுக்கு இழப்பு
வியாபாரிகள் கொள்முதல் செய்வதால்,  அரசின் ரேசன் அரிசிக்கு செல்லும் நெல்லின் அளவு குறைய வாய்ப்புள்ளது. அந்த நெல் மூட்டைகள்  தனியார் அரிசி ஆலைக்கு செல்ல அதிக அளவு வாய்ப்புள்ளது.

விவசாயிகளின் நெல் மூட்டைகளுக்கு உரிய விலை கிடைக்காமல்  நஷ்டம் ஏற்படுகிறது, உதாரணமாக தனியார் வியாபாரிகள் கொடுக்கும் விலை 62 கிலோ மூடைக்கு ரூ. 1,050  முதல் 1,100 மட்டுமே.

அரசு கொள்முதல் மையத்தில் நல்ல விலை கிடைப்பதால், விவசாயிகள் காத்திருந்து  கொள்முதல் மையத்தை விற்பனை செய்கின்றனர். ஆனால் கொள்முதல் நிலையம் திறக்க தாமதமாகிறது. 

உடனே திறக்க வேண்டும்: தேனி மாவட்ட ஆட்சியர்  கூடலூரில் நேரடி நெல்கொள்முதல் நிலையத்தை தொடங்க உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில், விரைவில் தேனி நுகர்பொருள் வாணிபக் கழக நிர்வாகம்  அதற்கான ஏற்பாடுகள் செய்து திறக்க வேண்டும், விவசாயிகளுக்கு இழப்பு ஏற்படாமல் பாதுகாக்க வேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com