கம்பம்: விடுதலைப் போராட்ட வீரா் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவா் ஜயந்தியையொட்டி, தேனி மாவட்டம், கம்பம் கூடலூர் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை பால்குடம் காவடி எடுத்து ஊர்வலமாக வந்து தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
கம்பம் தலைமை தபால் நிலையம் அருகே உள்ள தேவர் ஆலயத்தில் முத்துராமலிங்க தேவர் முழு உயர வெண்கலச் சிலை அமைக்கப்பட்டுள்ளது. தேவர் 115 ஆவது பிறந்த நாளான ஞாயிற்றுக்கிழமை காலையில் பெண்கள் பொங்கல் வைத்து அனைவருக்கும் வழங்கினர்.
இதையும் படிக்க | 20 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!
அனைத்து கட்சியினரும் அவர்களுக்கு கொடுக்கப்பட்ட நேரத்தில் ஊர்வலமாக வந்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
உத்தமபுரத்திலிருந்து சீர்மரபினர் சங்கம் சார்பில் பால்குடம், காவடி எடுத்தும், சிலம்பாட்டம், வாள்வீச்சு, சுருள் கத்தி வீச்சுடன் தங்கவிநாயகர் கோயிலிலிருந்து முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக வந்து தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். சீர்மரபினர் சங்கம் சார்பில் தேவர் சிலை அருகே நின்று உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
கூடலூரில் பிரதான சாலை அருகே உள்ள தேவர் சிலைக்கு திமுக, அதிமுக, காங்கிரஸ், பார்வர்டு பிளாக் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பொங்கல் வைத்து இனிப்புகள் வழங்கினர் கொண்டாடினர்.