புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினம் மீனவர்கள் 8 பேரை இலங்கை கடற்படையினர் செவ்வாய்க்கிழமை (செப். 20) அதிகாலை கைது செய்தனர்.
ஜெகதாப்பட்டினம் விசைப்படகு மீன்பிடி இறங்கு தளத்தில் இருந்து 87 விசைப்படகுகளில் மீனவர்கள் திங்கள்கிழமை கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர்.
இதில் பி. தமிழ்செல்வன் (37) என்பவருக்குச் சொந்தமான படகில் அவருடன் சி.விஜி (28), ஏ.தினேஷ் (26), கே. ரஞ்சித் (27), எஸ். பக்கிரிசாமி (45), எஸ். கமல் (25), எஸ். புனுது (41) மற்றும் எம். கார்த்திக் (27) ஆகிய 8 பேர் கோட்டைப்பட்டினத்தில் இருந்து சுமார் 32 கடல் மைல் தொலைவில் மீன்பிடித்துள்ளனர்.
அப்போது, அங்கு வந்த இலங்கைக் கடற்படையினர், எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாகக் கூறி 8 பேரையும் கைது செய்ததோடு, அவர்களது படகு மற்றும் மீன்பிடி உபகரணங்களையும் பறிமுதல் செய்தனர்.
இதைத் தொடர்ந்து, காங்கேசன் துறை கடற்படை தளத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.