ஆளுநரின் தேநீர் விருந்தை தமிழக அரசு புறக்கணிப்பதாக அமைச்சர் தங்கம் தென்னரசு வியாழக்கிழமை தெரிவித்துள்ளார்.
இன்று மாலை அரசியல் கட்சித் தலைவர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு தமிழக ஆளுநர் தேநீர் விருந்து அளிக்கவுள்ளார். நீட் விலக்கு மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பாததால் சிபிஎம், சிபிஐ, விசிக, மனிதநேய மக்கள் கட்சியினர் விருந்தில் பங்கேற்கப்போவதில்லை என அறிவித்துள்ளனர்.
இந்நிலையில், சென்னை ஆளுநர் மாளிகையில் தமிழக ஆளுநர் ஆர்,என்.ரவியுடன் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு மற்றும் மா.சுப்ரமணியன் ஆகியோர் திடீரென இன்று சந்தித்து ஆலோசனை நடத்தினர்.
இந்த சந்திப்பிற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் தங்கம் தென்னரசு பேசியதாவது:
“தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பாமல் ஆளுநர் காலதாமதம் செய்து வருகிறார். தற்போதைய சந்திப்பிலும் குடியரசுத் தலைவருக்கு அனுப்புவதாக எந்த உறுதியும் வழங்கவில்லை.
தமிழக சட்டப்பேரவை மாண்பையும், மக்களையும் மதிக்காததால் ஆளுநர் மாளிகையில் இன்று மாலை நடைபெறவுள்ள தேநீர் விருந்து மற்றும் பாரதியார் சிலை திறப்பு விழாவில் தமிழக முதல்வர் உள்ளிட்டோர் பங்கேற்க போவதில்லை” எனத் தெரிவித்துள்ளார்.