எடப்பாடி: எடப்பாடி அடுத்த பூலாம்பட்டி சுற்றுவட்டார பகுதியில், நேற்று (சனிக்கிழமை) மாலை வீசிய பலத்த சூறைக்காற்றால் பல இடங்களில் வாழை , தென்னை பாக்கு உள்ளிட்ட பயிர்கள் சேதம் அடைந்தன.
சேலம் மாவட்டத்தின் மேற்கு எல்லைப் பகுதியில் பாயும், காவிரி ஆற்றின் வடிநில பகுதிகளில் அமைந்துள்ள உள்ள பூலாம்பட்டி, கூடக்கல்,குப்பனூர் பில்லுக்குறிச்சி மற்றும் சித்தூர் உள்ளிட்ட காவிரி பாசனப் பகுதிகளில் கடந்த சில தினங்களாக மழைப்பொழிவு ஏதுமின்றி, கடுமையான வெப்பம் சுட்டெரித்து வந்தது.
இந்நிலையில் சனிக்கிழமை மாலை இப்பகுதியில் சிறு தூரல்கள் உடன் பலத்த சூறைக்காற்று வீசியது. இதில் அப்பகுதியில் பயிரிடப்பட்டிருந்த வாழை, தென்னை, பாக்கு மற்றும் மா உள்ளிட்ட மரப் பயிர்கள் கடும் சேதம் அடைந்தன. பலத்த சூறைக்காற்றால் பிரதான சாலைகளில் பல இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்து சாலையின் குறுக்கே விழுந்தது.இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
பூலாம்பட்டி சுற்றுவட்டார பகுதியில் பல இடங்களில் வீட்டின் கூரைகள் காற்றில் பறந்தது. மரங்கள் முறிந்து மின்பாதையில் மீது விழுந்தது அப்பகுதியில் மின் வினியோகம் மற்றும் குடிநீர் விநியோகம் பாதிக்கப்பிற்குள்ளானது.
இதுகுறித்து பாதிக்க உள்ளான விவசாயியான பூலாம்பட்டி அடுத்த ஓனாம்பாறை பகுதியைச் சேர்ந்த ராமசுந்தரம் கூறுகையில்: கடந்த இரு ஆண்டுகளாக கரோனா பாதிப்பால் விவசாய விளைபொருட்களுக்கு போதிய விலை கிடைக்காமல் இப்பகுதி விவசாயிகள் சிரமத்திற்கு உள்ளாகி வந்த நிலையில், தற்போது வீசிய சூறைக்காற்றால், அறுவடை செய்ய இன்னும் குறுகிய காலமே இருந்த நிலையில் உள்ள வாழை உள்ளிட்ட பயிர்கள் பலத்த சேதமடைந்தது.
தங்களுக்கு பெரிய அளவிலான பொருளாதார இழப்பை ஏற்படுத்தியுள்ளதாகவும், இதுகுறித்து சம்மந்தப்பட்ட அலுவலர்கள் இப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டு, அரசு தங்களுக்கு உரிய இழப்பீடு வழங்கி உதவிக்கரம் நீட்ட வேண்டும் என்று வேண்டுகோள் விடுப்பதாக கூறினார்.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் வருவாய் ஆய்வாளர் வனஜா, வேலாயுதம், தோட்டக்கலை துறை உதவி இயக்குனர் அனுஜா, தாமரைச்செல்வி உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர் ஆய்வு செய்து வருகின்றனர்.