தஞ்சாவூர் தேர் திருவிழா விபத்து குறித்து விசாரிக்க ஒருநபர் குழு அமைக்கப்படுவதாக சட்டப்பேரவையில் அமைச்சர் செந்தில் பாலாஜி புதன்கிழமை அறிவித்துள்ளார்.
தஞ்சாவூர் அருகே களிமேடு கிராமத்தில் புதன்கிழமை அதிகாலை நடைபெற்ற தேர்த் திருவிழாவில் மின்சாரம் தாக்கியதில் 11 பேர் உயிரிழந்தனர். மேலும் 15 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த விவகாரம் குறித்து தமிழக சட்டப்பேரவையில் எதிர்க்கட்சிகளால் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டு, விவாதங்களும் நடைபெற்றன.
இந்நிலையில், அமைச்சர் செந்தில்பாலாஜி பேசுகையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி, தேர் திருவிழா விபத்து குறித்து விசாரிக்க ஐ.ஏ.எஸ். அதிகாரி குமார் ஜெயந்த் தலைமையில் ஒருநபர் ஆணையம் அமைக்கப்படுவதாக தெரிவித்தார்.