சாதி கயிறு அணிவது தொடர்பாக ஏற்பட்ட மோதலில் மாணவர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் குறித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அம்பாசமுத்திரம் அருகே பொதுக்குடியில் இயங்கி வரும் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவர்கள் தங்களது கையில் சாதியை குறிப்பிடும் வகையில் கயிறு கட்டி வந்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக பிளஸ் 2, பிளஸ் 1 மாணவர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பின்னர் கடந்த 25 -ஆம் தேதி இரு பிரிவைச் சேர்ந்த மாணவர்களிடையே ஏற்பட்ட தகராறில், ஒருவருக்கு ஒருவர் தாக்கிக் கொண்டதாகத் தெரிகிறது.
இதையும் படிக்க | ‘ஆபத்தான பயணங்களால் அதிகரிக்கும் அகதிகளின் பலி எண்ணிக்கை’: ஐநா கவலை
இதில், பாப்பாக்குடி பெருமாள் கோயில் தெருவைச் சேர்ந்த முருகன் மகன் பிளஸ் 2 மாணவர் செல்வ சூர்யா (17) காயம் அடைந்து சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், இன்று சனிக்கிழமை சிகிச்சை பலனின்றி செல்வ சூர்யா உயிரிழந்தார்.
இதையும் படிக்க | ‘அணு ஆயுதங்களைப் பயன்படுத்த தயங்க மாட்டோம்’: எச்சரிக்கும் வடகொரியா
இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர், “பள்ளி மாணவர்களிடையே சாதி பாகுபாடு உள்ளது என்பது மிகுந்த வேதனை அளிக்கிறது. சாதிக்காக மாணவர் ஒருவர் கொலை செய்யப்பட்டிருப்பது கண்டிக்கதக்கது. மேலும் பள்ளி பருவத்திலேயே சக மாணவர்களால் மாணவன் ஒருவர் கொலை செய்யப்பட்டிருப்பது காட்டுமிராண்டித்தனமானது மட்டுமல்ல மிகுந்த ஆபத்தானதும்கூட" எனத் தெரிவித்துள்ளார்.