மதுரை விமான நிலையத்தில் திமுக - பாஜகவினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கார் மீது பாஜகவினர் காலணி வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஜம்மு - காஷ்மீரில் நிகழ்ந்த பயங்கரவாத தாக்குதலில் இந்திய ராணுவ வீரர்கள் 4 பேர் வீர மரணம் அடைந்தனர். அதில் மதுரை திருமங்கலம் பகுதியை அடுத்த புதுப்பட்டியைச் சேர்ந்த லட்சுமணன் என்பவர் வீர மரணம் அடைந்தார்.
இதையும் படிக்க.. எம்.ஜி.ஆர். திறந்துவைத்த கருணாநிதிபுரம்!
அவரது உடல் விமான மூலம் மதுரை விமான நிலைய பழைய முனையத்திற்கு இன்று முற்பகலில் கொண்டுவரப்பட்டது. ராணுவ வீரருக்கு அஞ்சலி செலுத்த பாஜக மாவட்ட தலைவர் சரவணன் தலைமையில் பாஜகவினர் விமான நிலையத்தில் காத்திருந்தனர்.
அப்போது அங்கு தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், மாவட்ட ஆட்சியர் அனீஸ் சேகர் உள்ளிட்ட அதிகாரிகள் அஞ்சலி செலுத்த வந்திருந்தனர். அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், இவர்கள் ஏன் இங்கு வந்தார்கள்? என பாஜகவினரைப் பார்த்து கேட்டாராம். இது தெரிந்து பாஜகவினர் அமைச்சருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
உடனே அமைச்சரும் பாஜகவினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அங்கிருந்தவர்கள் இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தி வைத்தனர். தொடர்ந்து ராணுவ வீரரின் உடல் ஹைதராபாத்தில் இருந்து தனி விமானம் மூலம் மதுரை விமான நிலையத்திற்கு கொண்டுவரப்பட்டு அவருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
சென்னை ரெஜிமண்ட் பிரிவில் உள்ள கோயமுத்தூர் 35வது ரைபில் பிரிவு வெட்டின்ட் கர்னல் சத்யபிரபாத் தலைமையில் 48 இராணுவ வீரர்கள் மறைந்த வீரர் லட்சுமணனுக்கு தேசியக் கொடி அணிவித்து மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். தொடர்ந்து நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர், மதுரை மாநகர மேயர் இந்திராணி, விமான நிலைய இயக்குநர் பாபுராஜ், மத்திய தொழில் பாதுகாப்பு படை துணை கமாண்டன்ட் உமாமகேஸ்வரன், முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, மதுரை மாநகர் காவல் ஆணையர் செந்தில்குமார், மதுரை சரக காவல்துறை துணைத் தலைவர் பொன்னி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவபிரசாத் மற்றும் வீரர்கள் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.
தொடர்ந்து அமைச்சர் விமான நிலையத்திலிருந்து புறப்பட்டபோது பெருங்குடி அருகே பாஜகவைச் சேர்ந்த பெண் தொண்டர் ஒருவர் அமைச்சர் கார் மீது காலணியை வீசி காரை முற்றுகையிட்டு கோஷமிட்டனர். இதனால் சிறிது நேரம் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.