பிரபல ஓவியரும் பத்மஸ்ரீ விருது பெற்றவருமான மனோகர் தேவதாஸ்(வயது 86) புதன்கிழமை காலை காலமானார்.
பாரம்பரிய கட்டடங்களை வரையும் கலைஞராக அறியப்பட்டவர் மனோகர் தேவதாஸ். இவர் ரெட்டினிடிஸ் பிக்மென்டோசா என்ற விழித்திரை நோயால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், சென்னையில் இன்று அதிகாலை காலமானார்.
இவரது மறைவுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, மதுரை எம்.பி. சு.வெங்கடேசன், எழுத்தாளர்கள், கலைஞர்கள் என பல்வேறு தரப்பினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
கடந்த 1936-ஆம் ஆண்டு மதுரையில் பிறந்த மனோகர் தேவதாஸ், தனது 30 வயதில் ரெட்டினிடிஸ் பிக்மென்டோசா நோயால் பாதிக்கப்பட்டு பார்வையில் குறைபாடு ஏற்பட்டது. 83 வயதில் முழு பார்வை திறனையும் இழந்தார். இருப்பினும், பாரம்பரிய கட்டடங்களை வரையும் தனது கலைப் பணியை தொடர்ந்து வந்தார்.
மேலும், கிரீன் வெல் இயர்ஸ், மல்டி ஃபேக்ட்ஸ் ஆஃப் மை மதுரை, நிறங்களின் மொழி, டிரீம்ஸ் போன்ற பல நூல்களையும் எழுதியுள்ளார்.
கடந்த 2008-இல் அவரது மனைவி மஹிமா பெயரில் நிறுவப்பட்ட தொண்டு நிறுவனம் மூலம் கிராம மக்களின் கண் சிகிச்சைக்கு உதவி வந்தார்.
இவருக்கு 2020-ஆம் ஆண்டு மத்திய அரசின் பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது.