காஞ்சிபுரம்: சென்னையின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து நூறு கன அடி நீர் வீதம் இன்று (டிச.9) நண்பகல் 12 மணி முதல் வெளியேற்றப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து 340 கன அடியாக உள்ளது. ஏரியின் நீர்மட்டம் தற்போது 20.37 அடியாக உள்ளது.
இதனிடையே மாண்டஸ் புயல் காரணமாக பெய்து வரும் தொடர் மழையாலும், நீர்வரத்தாலும் ஏரியில் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த நீா்மட்ட உயரம் 24 அடியாக உள்ளது. ஏரியின் நீர்மட்டம் 20 அடியாக வைத்து கண்காணிப்பது வழக்கம்.
தற்போது தொடர் மழையால் 20 அடிக்கு மேல் நீர்மட்டம் இருப்பதால், நண்பகல் 12 மணி முதல் ஏரியிலிருந்து தண்ணீர் திறந்துவிடப்படவுள்ளது.
மாண்டஸ் புயல்:
வங்கக் கடலில் அந்தமான் அருகே உருவான காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி படிப்படியாக வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவானது. அது டிச.7ஆம் தேதி இரவு 11.30 மணியளவில் புயலாக வலுப்பெற்றது.
'மாண்டஸ்' எனப் பெயரிடப்பட்டுள்ள புயல், சென்னையிலிருந்து 320 கிலோ மீட்டர் தொலைவிலும், காரைக்காலிலிருந்து 240 கிலோ மீட்டர் தொலைவிலும் மாண்டஸ் நிலைகொண்டுள்ளது.
கடந்த 6 மணி நேரமாக மணிக்கு 12 கி.மீ. வேகத்தில் மாண்டஸ் புயல் நகர்ந்து வருவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 15 கி.மீ. வேகத்தில் நகர்ந்துகொண்டிருந்த நிலையில் தற்போது 12 கி.மீ. வேகத்தில் நகர்கிறது.