தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரூ.520 கோடிக்கு மது விற்பனையானதாக டாஸ்மாக் தெரிவித்துள்ளது.
பொங்கல் பண்டிகையின்போது தமிழகத்தில் கடந்த ஆண்டை விட மது விற்பனை அதிகரித்துள்ளது.
இதுகுறித்து டாஸ்மாக் வெளியிட்ட அறிக்கையில்,
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி.13 மற்றும் ஜன.14 ஆம் தேதி மட்டும் ரூ.520.14 கோடிக்கு மது விற்பனையாகியுள்ளது.
குறிப்பாக, ஜன.13 ஆம் தேதி ரூ. 203.05 கோடிக்கும், ஜன.14-ல் ரூ.317.08 கோடிக்கும் மது விற்பனையானது.
கடந்த 2021-ஆம் ஆண்டு பொங்கலின் போது ரூ.417.18 கோடிக்கு விற்பனையான மது இந்தாண்டு 24.67 சதவீதம் அதிகரித்து ரூ.520.14 கோடி விற்பனை என்கிற புதிய உச்சத்தை அடைந்துள்ளது.
தமிழகத்தில் அதிகபட்சமாக மதுரை மாவட்டத்தில் ரூ.111.47 கோடி, திருச்சியில் ரூ.107.10 கோடி, சேலத்தில் ரூ.104.54 கோடிக்கும் மது விற்பனை நடைபெற்றது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.