தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம் குறித்த அரசாணை தமிழக அரசு வெளியிடப்பட்டுள்ளது. இதில் வழங்கப்படும் உணவுப் பட்டியல் வெளியாகியுள்ளது.
காலை சிற்றுண்டி திட்டம்: 5 குறிக்கோள்கள்
5-ம் வகுப்பு வரையிலான அரசுப் பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தில் 5 குறிக்கோள்கள் உள்ளன.
1. மாணவர்கள் பசியின்றி பள்ளிக்கு வருவதை உறுதி செய்தல்
2. மாணவர்கள் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்படாமல் இருத்தலை உறுதி செய்தல்
3. மாணவர்கள் ஊட்டச்சத்து நிலையை உயர்த்துதல், குறிப்பாக ரத்த சோகை குறைபாட்டை நீக்குதல்
4. பள்ளிகளில் மாணவர்கள் வருகையை அதிகரித்தல், தக்க வைத்துக் கொள்ளுதல்
5. வேலைக்குச் செல்லும் தாய்மார்களின் பணிச் சுமையை குறைத்தல்
பள்ளிகளில் காலையில் வழங்கப்படும் சிற்றுண்டி விவரம்:
1. திங்கள்கிழமை காலை ரவா உப்புமா வகை உணவு வழங்கப்படும். ரவா, சேமியா, அரிசி, கோதுமை ரவை உப்புமா இவற்றில் ஏதாவது ஒன்றுடன் காய்கறி சாம்பார் வழங்கப்படும்.
2. செவ்வாய்க்கிழமை காலையில் கிச்சடி வகை உணவு வழங்கப்படும். ரவா காய்கறி கிச்சடி, சேமியா கிச்சடி, சோள காய்கறி கிச்சடி, கோதுமை ரவா காய்கறி கிச்சடி ஏதாவது ஒன்று வழங்கப்படும்.
3. புதன்கிழமை ரவா பொங்கல் அல்லது வெண் பொங்கலுடன் காய்கறி சாம்பார் வழங்கப்படும்.
4. வியாழக்கிழமை உப்புமா வகை உணவு வழங்கப்படும்.
5. வெள்ளிக்கிழமை கிச்சடியுடன் ரவா கேசரி அல்லது சேமியா கேசரி வழங்கப்படும்.
ஒரு குழந்தைக்கு ஒரு நாளைக்கு காலையில் வழங்கப்படும் உணவுக்கான அளவை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
அரிசி, ரவை, கோதுமை, சேமியா இவற்றில் ஏதாவது ஒன்று 50 கிராம் அளவு இருக்க வேண்டும்.
சாமபாருக்கான பருப்பு தலா 15 கிராம் என்ற அளவில் இருக்க வேண்டும்.
காலையில் பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கு சூடான, சத்தான உணவை சமைத்து, அனைத்து பள்ளி வேலை நாள்களிலும் மாணவர்களுக்கு வழங்க வேண்டும் என்று அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.