
மாணவிக்குப் பாலியல் தொல்லை: தலைமையாசிரியர் கைது
ஓமலூர் அருகே தாரமங்கலம் தனியார் பள்ளியில் தலைமையாசிரியர், மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த சம்பவம் பெற்றோர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தாரமங்கலம் காவலர்கள் மற்றும் ஓமலூர் அனைத்து மகளிர் காவல் துறையினர் ஆசிரியரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிக்க.. திருடிய லாக்கரை நகைகளோடு குப்பைத் தொட்டியில் வீசிய திருடர்கள்: ஏன்? எதற்கு?
சேலம் மாவட்டம், ஓமலூர் அருகேயுள்ள தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளியில் சுமார் 1000க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை படித்து வருகின்றனர்.
இந்த நிலையில் இப்பள்ளியில் தலைமையாசிரியராக மேட்டூர் அருகே உள்ள நால்ரோடு பகுதியைச் சேர்ந்த பெருமாள் மகன் விஜயகுமார் என்பவர் பணிபுரிந்து வருகிறார். இதைத்தொடர்ந்து அவர் பல மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது. மேலும் மாணவிகளை பாலியல் தொந்தரவு செய்தது தொடர்பாக வெளியில் சொன்னால் இன்டர்னல் மார்க் குறைத்து போடுவேன் என்று மாணவிகளை மிரட்டியதாக கூறப்படுகிறது.
இதில் ஒரு மாணவி மட்டும் தைரியமாக தன்னுடைய பெற்றோரிடம் தகவல் கொடுத்துள்ளார். பின்பு முன்னாள் மாணவர்களுக்கு இந்த தகவல் தெரிந்தவுடன் பெற்றோர்கள் மற்றும் முன்னாள் மாணவர்கள் இன்று பள்ளியை முற்றுகையிட்டனர்.
இந்த சம்பவம் அறிந்த ஓமலூர் காவல்துறை துணை கண்காணிப்பாளர் சங்கீதா, அனைத்து மகளிர் காவல் துறையினர் மற்றும் குழந்தைகள் மாவட்ட பாதுகாப்பு நலத்துறை அலுவலர்கள் ஆகியோர் மாணவிகளிடம் தீவிர விசாரணை நடத்தினர். பின்னர் தலைமையாசிரியர் விஜயகுமாரை கைது செய்து நான்கு பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து சேலம் சிறையில் அடைத்தனர்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...