மாநில கல்விக் கொள்கையை வடிவமைக்க அமைக்கப்பட்ட ஓய்வுபெற்ற நீதியரசர் முருகேசன் தலைமையிலான 13 பேர் குழுவினருடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார்.
மத்திய அரசின் புதிய கல்விக்கொள்கையை ஏற்காத நிலையில், மாநிலத்திற்கு என தமிழ்நாடு அரசு தனி கல்விக் கொள்கையை உருவாக்குகிறது.
இதற்காக, ஓய்வுபெற்ற நீதியரசர் முருகேசன் தலைமையிலான 13 பேர் குழு அமைக்கப்பட்டது.
இந்த குழுவினருடனான முதல் கூட்டம் புதன்கிழமை காலை தலைமைச் செயலகத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்த கூட்டத்தில் பாடத்திட்டத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய சீர்திருத்தங்கள், வேலைவாய்ப்புக்கேற்ற பாடத்திட்டத்தை வடிவமைத்தல், மாநில மொழி, உரிமைகள், வரலாற்றுக்கு ஏற்றவாறு கொள்கைகளை வடிவமைத்தல் உள்ளிட்டவை தொடர்பாக ஆலோசனை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
கூட்டத்தில் குழுவின் தலைவர் ஓய்வுபெற்ற நீதிபதி முருகேசன், உறுப்பினர்கள் ஜவஹர் நேசன், ராமானுஜம், சுல்தான் இஸ்மாயில், ராம சீனுவாசன், அருணா ரத்னம், மாடசாமி, எஸ்.ராமகிருஷ்ணன், விஸ்வநாதன் ஆனந்த், டி.எம்.கிருஷ்ணா, துளசிதாஸ், பாலு, ஜெயஸ்ரீ தாமேதரன் மற்றும் மெட்ரிக் பள்ளிகள் இயக்குநர் கருப்புசாமி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.