அதிமுகவில் 'ஒற்றைத் தலைமை' சர்ச்சை வலுத்து வரும் நிலையில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் தனது ஆதரவாளர்களுடன் இன்று தொடர்ந்து 4-வது நாளாக ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.
கடந்த செவ்வாய்க்கிழமை அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் 'ஒற்றைத் தலைமை' குறித்து விவாதிக்கப்பட்டதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார். இதையடுத்து, அதிமுகவில் 'ஒற்றைத் தலைமை' விவகாரம் வலுத்து வருகிறது.
இதுதொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே. பழனிசாமியும் தங்கள் ஆதரவாளர்களுடன் தனித்தனியே ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.
எடப்பாடி கே. பழனிசாமி நேற்று சேலம் சென்றுள்ள நிலையில் ஓபிஎஸ் தொடர்ந்து இன்று 4 ஆவது நாளாக சென்னையில் கிரீன்வேஸ் சாலையில் உள்ள தனது வீட்டில் தன்னுடைய ஆதரவாளர்களுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.
வருகிற 23-ஆம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க | ஒற்றைத் தலைமை சர்ச்சை உருவானது எப்படி? ஓபிஎஸ் விளக்கம்