மழை காரணமாக சென்னையில் நேற்றிரவு முதல் இன்று அதிகாலை வரை 31 விமானங்களின் சேவை பாதிக்கப்பட்டது.
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் 17 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. அதன்படி சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று இரவு முதல் இடி, மின்னலுடன் கனமழை பெய்தது.
கனமழையால் நுங்கம்பாக்கம், வடபழனி, கோடம்பாக்கம், அரும்பாக்கம், கோயம்பேடு உள்ளிட்ட பகுதிகளில் சாலைகளில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் ஆங்காங்கே போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மேலும் மழை காரணமாக நேற்றிரவு முதல் இன்று அதிகாலை வரை 31 விமானங்களின் சேவை பாதிக்கப்பட்டது.
இதையும் படிக்க- கடைசி டி20: மழையால் இந்தியா - தென்னாப்பிரிக்கா ஆட்டம் ரத்து
ஜெர்மனி, தோகா, துபை, மும்பை விமானங்கள் சென்னையில் தரையிறங்க முடியாமல் ஐதராபாத், பெங்களூரு திரும்பின. அதேசமயம், மலேசியா, தாய்லாந்து, தில்லி, ஐதராபாத் உள்ளிட்ட இடங்களில் இருந்து வந்த 12 விமானங்கள் நடுவானில் வட்டமடித்தன.
நள்ளிரவு 12 மணிக்கு மேல் மழை, இடி, மின்னல் காற்று ஓரளவு குறைந்ததையடுத்து விமானங்கள் ஒவ்வொன்றாக தரையிறங்கின. சென்னையில் இருந்து 8 சர்வதேச விமானங்கள் உள்பட 15 விமானங்கள் தாமதமாக புறப்பட்டுச் சென்றன.