புதுச்சேரி: பிளஸ் 2 மாணவர்கள் 96.13 சதவீதம் தேர்ச்சி
புதுச்சேரியில் பிளஸ் 2 பொதுத்தேர்வில் 96.13 சதவிதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த முறையை விட 4.81 சதவீதம் கூடுதல் தேர்ச்சி என முதல்வர் ரங்கசாமி தெரிவித்தார்.
புதுச்சேரியில் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகளை புதுச்சேரி சட்டப்பேரவை அலுவலகத்தில் திங்கள்கிழமை முதல்வர் என்.ரங்கசாமி, கல்வி அமைச்சர் ஏ.நமச்சிவாயம் ஆகியோர் வெளியிட்டனர்.
அப்போது, செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் ரங்கசாமி கூறியதாவது: பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் புதுச்சேரி மற்றும் காரைக்காலில் அனைத்து பள்ளிகளிலும் 96.13 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளதாகவும், கடந்த முறையை விட இது தேர்ச்சி விகிதம் 4.81 சதவீதம் கூடுதலாகும் என்றார்.
மொத்தம் 14 ஆயிரத்து 423 மாணவர்கள் தேர்வு எழுதியதில் 13 ஆயிரத்து 865 பேர் தேர்ச்சி பெற்றுள்ளதாக கூறிய அவர், 68 பள்ளிகள் 100% தேர்ச்சி பெற்றுள்ளன. இதில் இரண்டு அரசு பள்ளிகள் அடங்கும் என்றார்.
இதையும் படிக்க | பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு: 90.07% பேர் தேர்ச்சி
கடந்த ஆண்டை விட அரசு பள்ளிகள் 10 சதவிதம் கூடுதல் தேர்ச்சியை பெற்றுள்ளன என்றும், பிளஸ் 2 வகுப்பில் தேர்ச்சி பெற்ற அனைத்து மாணவ, மாணவிகளும் உயர்கல்வி படிக்கும் அளவிற்கு அரசு கல்லூரிகளில் கூடுதல் இடங்கள் உருவாக்கி கொடுக்கப்படும் என்றார்.
பள்ளி கல்வி கட்டணங்கள் குறித்து, அரசு விரைவில் முடிவு செய்து அதற்கான அறிவிப்பை வெளியிடும் என்றும் முதல்வர் தெரிவித்தார். சென்டாக் மூலம் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை விரைவில் தொடங்கப்படும் என்றும் கூறினார்.
பேட்டியின் போது உடனிருந்த கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம், கல்வித்துறை செயலர் ஜவகர், மற்றும் கல்வித்துறை இயக்குநர் ருத்ரகவுடு ஆகியோரை முதல்வர் ரங்கசாமி சால்வை அணிவித்து பாராட்டினார்.
இதையும் படிக்க | பிளஸ் 2 தோ்வு முடிவுகள் வெளியீடு: 93.76% பேர் தேர்ச்சி