அதிமுக பொதுக் குழு: ஓபிஎஸ் - ஈபிஎஸ் இடையே காரசார வாதம்

அதிமுக பொதுக் குழு விவகாரம் தொடர்பாக கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தரப்பினருக்கு இடையே காரசார விவாதம் நடைபெற்று வருகிறது.
அதிமுக பொதுக் குழு: ஓபிஎஸ் - ஈபிஎஸ் இடையே காரசார வாதம்
அதிமுக பொதுக் குழு: ஓபிஎஸ் - ஈபிஎஸ் இடையே காரசார வாதம்


சென்னை: அதிமுக பொதுக் குழு விவகாரம் தொடர்பாக கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தரப்பினருக்கு இடையே காரசார விவாதம் நடைபெற்று வருகிறது.

சென்னை வானகரத்தில் அதிமுக பொதுக்குழு கூட்டம் நாளை (ஜூன் 23) நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதில் ஒருங்கிணைப்பாளா், இணை ஒருங்கிணைப்பாளா் பதவிகளுக்கு மாற்றாக பொதுச் செயலாளா் பொறுப்பை மீண்டும் கொண்டு வரப்படலாம் எனத் தெரிகிறது.

இந்த நிலையில், அதிமுக கட்சி விதிகளில் திருத்தம் செய்ய தடை விதிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட கூடுதல் மனுக்கள் சென்னை உயா் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது ஓ. பன்னீர்செல்வம் தரப்பில் வைக்கப்பட்ட வாதங்களாவன,  பொதுக் குழு நடக்கட்டும். ஆனால் ஒப்புதல் பெறப்பட்ட 23 தீர்மானங்களைத் தவிர, வேறு எந்தத் தீர்மானமும் நிறைவேற்றக் கூடாது.

ஒருங்கிணைப்பாளருக்குத் தெரியாமல் பொதுக் குழுவில்  எந்தத் தீர்மானத்தையும் வைக்க முடியாது. ஒரு விவகாரத்தை முன் மொழிவது என்பது வேறு, அதனை எழுப்புவது என்பது வேறு. பொதுக்குழுவில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என்ற எண்ணத்தில், கூட்டத்துக்குச் செல்ல முடியாது என்று ஓ. பன்னீர்செல்வம் தரப்பில் வாதிடப்பட்டது.

ஒருங்கிணைப்பாளருக்குத் தெரியாமல் பொதுக் குழுவில்  எந்த தீர்மானத்தையும் வைக்க முடியாது என்றும் தீர்மானம் என்பதை கட்சியின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர்தான் ஒப்புதல் வழங்குவார்.  பொதுக் குழுவில், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளரின் ஒப்புதலுக்குப் பிறகே தீர்மானம் கொண்டு வரப்படும் என்றும்  கூறப்பட்டது.

இதற்கு எடப்பாடி பழனிசாமி தரப்பில், பொதுக் குழுதான் உச்ச பட்ச அதிகாரம் பெற்றது என்பதை அதிமுக சட்ட விதி சொல்கிறது. பொதுக் குழுவுக்கு எதிர்பார்ப்புடன் உறுப்பினர்கள் வருவார்கள். இதெல்லாம் நடக்கும் என்று தெரிவிப்பது முதிர்ச்சியற்றது.

பொதுக் குழுவில் இது நடக்க வேண்டும் என முன்கூட்டியே முடிவு செய்ய இயலாது என்று எடப்பாடி பழனிசாமி தரப்பில் வாதங்கள் முன் வைக்கப்பட்டன.

அதிமுக பொதுச் செயலாளராக இருந்த ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, கட்சியில் ஒருங்கிணைப்பாளா், இணை ஒருங்கிணைப்பாளா் பதவிகள் உருவாக்கப்பட்டன. இது அதிமுகவின் சட்ட திட்டங்களுக்கு எதிரானது எனக் கூறி அந்தக் கட்சியின் உறுப்பினா்களான ராம்குமாா் ஆதித்தன், சுரேன் பழனிசாமி ஆகியோா் சென்னை உயா் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனா்.

அந்த மனுவில், ‘பொதுச் செயலரின் அதிகாரங்களை ஒருங்கிணைப்பாளா், இணை ஒருங்கிணைப்பாளருக்கு வழங்கி நிறைவேற்றப்பட்ட தீா்மானங்களை ரத்து செய்ய வேண்டும். கடந்த ஆண்டு டிசம்பா் மாதம் நடந்த அதிமுக உட்கட்சித் தோ்தலை ரத்து செய்ய வேண்டும். ஒருங்கிணைப்பாளா், இணை ஒருங்கிணைப்பாளா் ஆகிய புதிய நியமனங்களை மேற்கொள்ள தடை விதிக்க வேண்டும்’ என ஏற்கெனவே கோரியிருந்தனா்.

இந்த மனுக்களுடன், பொதுக்குழு, செயற்குழு கூட்டங்களைக் கூட்ட ஒருங்கிணைப்பாளா், இணை ஒருங்கிணைப்பாளருக்கு தடை விதிக்கக் கோரி கூடுதல் மனுக்களை கடந்த 18-ஆம் தேதி தாக்கல் செய்தனா்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com