தமிழகத்தில் இந்த ஆண்டில் இதுவரை டெங்கு காய்ச்சலினால் எந்த ஒரு உயிரிழப்பும் இல்லை என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
தமிழகத்தில் இந்த ஆண்டு ஜனவரி முதல் 2,485 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதியாகியுள்ளது. இந்த ஆண்டு டெங்குவினால் ஒரு உயிரிழப்பு கூட ஏற்படாத வண்ணம் மக்கள் நல்வாழ்வுத்துறை செயல்படும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நம்பிக்கை தெரிவித்தார்.
இது குறித்து அவர் கூறியது, “ கடந்த ஆண்டு டெங்குவினால் 8 உயிரிழப்புகள் ஏற்பட்டன. கடந்த 2017 ஆம் ஆண்டு அதிகபட்சமாக 65 உயிரிழப்புகள் ஏற்பட்டன. டெங்கு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த அரசு சார்பில் பல்வேறு முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. ஜனவரி முதல் மே மாதம் வரை 2 லட்சம் பேருக்கு டெங்குவிற்கான பரிசோதனை மேற்கொண்டதில் இதுவரை 2,485 டெங்கு இருப்பது உறுதியாகியுள்ளது. இந்த ஆண்டு மனதிற்கு மகிழ்ச்சி அளிக்கும் விதமாக எந்த ஒரு உயிரிழப்பும் பதிவாகவில்லை. ” என்றார்.
ஆண்டுதோறும் மத்திய அரசினால் மே 16 ஆம் நாள் ஏடிஸ் கொசுவினால் பரவும் டெங்கு குறித்து விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளும் தினமாக அனுசரிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.