சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் அடுத்த 2 மணிநேரத்திற்கு மழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் நேற்று இரவு முதல் கனமழை பெய்து வருகிறது.
நகரின் பல்வேறு பகுதிகளில் மழைநீர் வடிகால் கட்டமைப்பு மூலம் வெள்ளநீர் வெளியேறியுள்ள நிலையில், சில இடங்களில் தேங்கியுள்ள நீரை மாநகராட்சி நிர்வாகத்தினர் வெளியேற்றி வருகின்றனர்.
இந்நிலையில், அடுத்த 2 மணி நேரத்திற்கு பல்லாவரம், ஆலந்தூர், அமைந்தக்கரை, அயனாவரம், எழும்பூர், கும்மிடிப்பூண்டி, கிண்டி, குன்றத்தூர், மதுரவாயல், மாம்பலம், பெரம்பூர், பூவிருந்தவல்லி, பொன்னேரி, புரசைவாக்கம், ஸ்ரீபெரும்புதூர், தாம்பரம், திருவொற்றியூர், தண்டையார்பேட்டை, ஊத்துக்கோட்டை, வண்டலூர், அம்பத்தூர், மாதவரம் பகுதிகளில் லேசான மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் பிற்பகல் 2.30 மணிக்கு வெளியிட்ட செய்தியில் தெரிவித்துள்ளது.
அதேபோல், ஆற்காடு, நெமிலி, பள்ளிப்பட்டு, சோளிங்கர், திருத்தணி, வாலாஜாபேட்டை பகுதிகளில் லேசான மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.