நாமக்கல்: மோகனூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் 2022-23 ஆம் ஆண்டிற்கான கரும்பு அரைவை சனிக்கிழமை தொடங்கியது.
நாமக்கல் மாவட்டம் மோகனூரில், சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலை இயங்கி வருகிறது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் அல்லது நவம்பர் மாதங்களில் கரும்பு அரைவையானது தொடங்கப்படும்.
மோகனூர், பாலப்பட்டி, ராசிபுரம், முசிறி, கள்ளக்குறிச்சி, விழுப்புரம் போன்ற இடங்களில் இருந்து ஆலையில் அங்கத்தினர்களாக பதிவு செய்த விவசாயிகளிடம், அரைவைக்கு தேவையான கரும்புகள் கொள்முதல் செய்யப்படும்.
2022-23 ஆம் ஆண்டிற்கு 1.75 லட்சம் டன் கரும்புகள் அரைவை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 4,000 ஏக்கரில் இதற்கான கரும்புகள் பயிரிடப்பட்டு தயார் நிலையில் உள்ளன.
சர்க்கரை ஆலையில் சனிக்கிழமை காலை 10.30 மணி அளவில் நடைபெற்ற கரும்பு அரைவை தொடக்க விழாவில் மக்களவை உறுப்பினர் ஏ.கே.பி.சின்ராஜ், மாநிலங்களவை உறுப்பினர் கே.ஆர்.என். ராஜேஷ்குமார், மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா பி.சிங், சர்க்கரை ஆலை நிர்வாக இயக்குநர் க.ரா.மல்லிகா மற்றும் அதிகாரிகள், விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.