தவறான சிகிச்சையால் உயிரிழந்த கால்பந்து வீராங்கனை பிரியாவின் உடலுக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.
கொளத்தூா் பெரியாா் நகா் அரசு மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்ட தவறான சிகிச்சையால் சென்னை வியாசா்பாடியைச் சேர்ந்த கால்பந்து வீராங்கனை பிரியா (17) இன்று உயிரிழந்தார்.
தவறான சிகிச்சையால் கால் அகற்றப்பட்டு உயிரிழந்த பிரியாவின் உடலைப் பெற மறுத்து, மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அவரது உறவினர்கள், நண்பர்கள் போராட்டம் நடத்தினர்.
இதையடுத்து, பிரியாவின் உறவினர்கள், நண்பர்களுடன் காவல்துறை மற்றும் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை முதல்வா் டாக்டா் தேரணிராஜனும் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை சமரசம் செய்த நிலையில் பிரியாவின் உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.
பின்னர் பிரியாவின் உடல் வியாசர்பாடியில் உள்ள அவரது வீட்டிற்கு கொண்டுசெல்லப்பட்டு அங்கு அவரது உறவினர்கள், நண்பர்கள் உள்ளிட்ட பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இன்று மாலை அவரது உடலுக்கு இறுதிச் சடங்கு நடைபெறுகிறது.
இந்நிலையில் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நேரில் சென்று பிரியாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். அவரது குடும்பத்தினருக்கும் ஆறுதல் தெரிவித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தவறான சிகிச்சையால் ஒரு சிறந்த வீராங்கனையை இழந்துள்ளதாகவும் இனி இதுபோன்ற நிகழ்வுகள் நடைபெறாமல் தடுக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.
இதையும் படிக்க | பேச்சுவார்த்தைக்குப் பின் பிரியாவின் உடல் பெற்றோரிடம் ஒப்படைப்பு