உத்தரப் பிரதேசத்தில் நடைபெற்று வரும் ''காசி தமிழ் சங்கமம்'' நிகழ்ச்சியில் புதுச்சேரி ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் நாளை கலந்துகொள்ளவுள்ளார்.
நாட்டின் மிக முக்கியமான மற்றும் புராதன பகுதியான காசிக்கும் தமிழகத்திற்குமிடையே உள்ள பழமையான தொடா்பை மீண்டும் கண்டறிந்து, உறுத்திப்படுத்திக் கொண்டாடும் நோக்கத்துடன் ''காசி தமிழ் சங்கமம்'' நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.
உத்தரப் பிரதேச மாநிலம் வாராணசியில் (காசி) நவம்பா் 17 -ஆம் தேதி முதல் டிசம்பா் 16 வரை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்திற்கு காசிக்கும் உள்ள பண்பாடு, கலாசார தொடா்புகளை எடுத்துரைக்கு வகையில் நடைபெறும் காசி- தமிழ் சங்கமத்தில் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.
இந்த நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக தமிழகத்திலிருந்து நேரடியாக ரயில்கள் மூலம் பக்தர்கள், கலைஞர்கள், பொதுமக்கள் என பலர் காசி- தமிழ் சங்கமத்தில் கலந்துகொண்டு வருகின்றனர்.
அந்தவகையில், புதுச்சேரி ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் காசி- தமிழ் சங்கமம் நிகழ்ச்சிகளில் நாளை பங்கேற்கிறார்.
இது தொடர்பாக் சுட்டுரையில் பதிவிட்டுள்ள தமிழிசை, மத்திய கல்வி அமைச்சகத்தின் சார்பில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் அவர்கள் அழைப்பின் பேரில் "காசி தமிழ் சங்கமம்" நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக இன்று இரவு காசி செல்கிறேன்.
நாளை முழுவதும் தங்கி இருந்து வாரணாசியில் நடைபெறும் "காசி தமிழ் சங்கமம்" நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தமிழகம் மற்றும் புதுவையைச் சேர்ந்த தமிழறிஞர்களும்,தமிழ் ஆர்வலர்களும் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளுக்கு தலைமையேற்க உள்ளேன் என பதிவிட்டுள்ளார்.