ராணிப்பேட்டை மாவட்டத்தில் 5 மணி நேரத்தில் 50 லட்சம் பனை விதைகள் நடும் சாதனை முயற்சியை மாவட்ட ஆட்சியர் தெ.பாஸ்கர பாண்டியன் தொடக்கி வைத்தார்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையிலும், நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்தும் வகையிலும், மாநில மரமான பனை மரங்களின் பரப்பை அதிகரிக்கும் நோக்கில் மாவட்ட நிர்வாகம் சார்பில் 5 மணி நேரத்தில் 50 லட்சம் பணை விதைகள் நடும் சாதனை முயற்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
மாவட்டத்தில் உள்ள 288 ஊராட்சிகள் உதவியோடு அந்தந்த பகுதியில் சேகரிக்கப்பட சுமார் 50 லட்சத்திற்கும் அதிகமான பனை விதைகளை, அந்தந்த பகுதி பொது மக்கள் மூலம் 5 மணி நேரம் 50 லட்சம் பனை விதைகள் நடவு செய்யும் பணி திங்கள்கிழமை காலை 8 மணியளவில் துவங்கப்பட்டது.
ராணிப்பேட்டை மாவட்டம் கலவை அடுத்த அரூர் ஊராட்சிக்குட்பட்ட தரிசு நிலத்தில் மாவட்ட ஆட்சியர் தெ.பாஸ்கர பாண்டியன் பனை விதை நட்டு துவக்கி வைத்தார். இதையடுத்து வாலாஜா வட்டம் தென்கடப்பந்தாங்கல் ஊராட்சிக்குட்பட்ட குளக்கரையில் பனை விதைகள் நடும் பணியை அமைச்சர் ஆர்.காந்தி துவக்கி வைத்தார்.
இந்த சாதனை நிகழ்வில் மாவட்டத்தில் உள்ள 288 ஊராட்சிகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிகள், மாவட்டத்தின் அனைத்து துறை அதிகாரிகள், நூறுநாள் வேலை திட்டப் பணியாளர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கலந்துகொண்டு பனை விதைகளை நடவு செய்தனர்.
இதையும் படிக்க: புதுச்சேரியில் மின் ஊழியா்கள் நள்ளிரவில் கைது!
288 ஊராட்சிகளில் காலை 8 மணிக்கு தொடங்கிய பனை விதைகள் நடும் பணி பிற்பகல் 1 மணிக்கு நிறைவுபெறுகிறது. 288 ஊராட்சிகளில் ஏரிக்கரை, குளக்கரை ஓரங்களில் பனை விதைகள் நடப்படுகின்றன.