சிதம்பரம் ஸ்ரீநடராஜப் பெருமானுக்கு நாளை மகாபிஷேகம்!

சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலில் ஸ்ரீமந் நடராஜப் பெருமானுக்கு புரட்டாசி மாத மகாபிஷேகம் நாளை மாலை வெகு சிறப்பாக நடைபெறுகிறது.
சிதம்பரம் ஸ்ரீநடராஜப் பெருமானுக்கு நாளை மகாபிஷேகம்!

பூலோக கைலாயம் என்றழைக்கப்படும் சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலில் வீற்றுள்ள ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமந் நடராஜப் பெருமானுக்கு புரட்டாசி மாத மகாபிஷேகம் நாளை (அக்.8ம் தேதி) சனிக்கிழமை மாலை வெகு சிறப்பாக நடைபெறுகிறது.

ஸ்ரீநடராஜர் கோயிலில் சித்சபையில் உள்ள மூலவரான ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமந் நடராஜமூர்த்திக்கு சித்திரை, ஆனி, ஆவணி, மார்கழி, மாசி, புரட்டாசி மாதங்களில் ஆண்டுக்கு 6 முறை மகாபிஷேகம் நடைபெறுவது தொன்றுதொட்டு வழக்கமாகும்.

ஆனித்திருமஞ்சனம், மார்கழி திருவாதிரை தரிசனம் ஆகிய இரு திருவிழாக்களின் போது ஆயிரங்கால் மண்டபத்தின் முகப்பில் அதிகாலை சூரிய உதயத்திற்கு முன்பும், மற்ற மாதங்களில் மாலை வேளையில் சித்சபையின் வெளியே உள்ள கனகசபையிலும் மகாபிஷேகம் நடைபெறுவது வழக்கம்.

புரட்டாசி மாத மகாபிஷேகம் சித்சபை முன்பு உள்ள கனகசபையில் நாளை (அக்.8-ம் தேதி) சனிக்கிழமை மாலை 6.30 மணிக்கு தொடங்கி நடைபெறுகிறது. மகாபிஷேகத்தை முன்னிட்டு நாளை சனிக்கிழமை காலை 4 மணிக்கு சுவாமி சன்னதி திறக்கப்பட்டுத் தொடர்ந்து உச்சிகால பூஜை வரை நடைபெறுகிறது. பின்னர் 9 மணிக்கு சிவகாமசுந்தரி சமேத நடராஜப் பெருமான் கனகசபையில் எழுந்தருளுகின்றனர்.  

மாலை  ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமந் நடராஜமூர்த்திக்கு பால், சந்தனம், தேன், தயிர், இளநீர், பன்னீர்  பஞ்சாமிர்தம், புஷ்பம், விபூதி உள்ளிட்டவை குடம், குடமாக அபிஷேகம் செய்யப்பட்டு மகா தீபாராதனை செய்யப்படவுள்ளது. மகாபிஷேக ஏற்பாடுகளைக் கோயில் பொது தீட்சிதர்கள் செய்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com