மதுரையில் ஆட்டோ-தனியார் பேருந்து நேருக்குநேர் மோதிய விபத்தில் நூலிழையில் ஆட்டோவில் பயணித்தவர்கள் உயிர்தப்பினர்.
இந்த சம்பவம் குறித்து நெஞ்சைப் பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
மதுரை செல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஷ் கண்ணன் இவருக்கு வயது 30, இவர் சொந்தமாக ஆட்டோ ஓட்டி வருகிறார். நேற்று இவர் மதுரை பாத்திமா கல்லூரி பகுதியிலிருந்து தத்தனேரி நோக்கி பயணிகளுடன் ஆட்டோ ஓட்டிக்கொண்டு வந்தார். வைத்தியநாதபுறம் பகுதியில் வந்து கொண்டிருந்தபோது திடீரென சாலையின் குறுக்கே நாய் ஒன்று வந்தது.
உடனடியாக பிரேக் அடித்ததால், ஆட்டோ ஓட்டுநர் கட்டுபாட்டை இழந்து ஆட்டோ எதிரே வந்த தனியார் பேருந்து நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது, நேர் எதிரில் வந்த கல்லூரி பேருந்து ஓட்டுனர் சாதூரியமாக இடது பக்கம் திருப்பியதால் பெரும் அசம்பாவிதம் தடுக்கப்பட்டுள்ளது.
மேலும், ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஆட்டோவில் பயணம் செய்த சிந்தாமணி பகுதியைச் சேர்ந்த புஷ்பா மற்றும் குழந்தைகள் தீபிகா, கவின் மற்றும் சுரேஷ்குமார் உள்ளிட்டோர் படுகாயம் அடைந்தனர். உடனடியாக அவர்களை மீட்ட பொதுமக்கள் அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த பகுதியில் அதிக அளவு நாய் தொல்லை இருப்பதால் இதுபோன்ற விபத்துகள் அடிக்கடி நிகழ்வதாகவும் மதுரை மாநகராட்சியினர் தெரு நாய்களைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.