
மழை குறைந்ததால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்தும், நீர் திறப்பும் 1.75 லட்சம் கனஅடியாக குறைந்துள்ளது.
கர்நாடக மாநில காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில், கடந்த சில நாள்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள கபினி, கிருஷ்ண ராஜசாகர் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால், இரு அணைகளில் இருந்தும் உபரிநீர் காவிரியில் திறக்கப்பட்டு வருகிறது.
மேலும், இருமாநில எல்லையில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருவதால், ஒகேனக்கல் மற்றும் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. ஒகேனக்கல் காவிரியில் நேற்று நிலவரப்படி 1.85 லட்சம் கனஅடியாக அதிகரித்தது. இன்று காலை நீர்வரத்து 1.75 லட்சம் கனஅடியாக குறைந்துள்ளது
இன்று அணைக்கான நீர்வரத்து 1.75 லட்சம் கனஅடியாக உள்ளது. அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவான 120 அடியாக நீடிக்கும் நிலையில், அணைக்கு வரும் நீர் முழுமையாக ஆற்றில் திறந்து விடப்படுகிறது. நீர்மின் நிலையங்கள் வழியாக 21 ஆயிரத்து 500 கனஅடி, உபரிநீர் போக்கியான 16 கண் மதகுகள் வழியாக 1லட்சத்து 53 ஆயிரத்து 500 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
படிக்க: ஜெயலலிதா இறந்த தேதியில் குழப்பம்?
கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு 200 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. நீர் இருப்பு 93.47 டி.எம். சியாக உள்ளது.அணையின் நீர்மட்டம் கடந்த 12ம் தேதி முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது. தொடர்ந்து 7வது நாளாக இன்றும் நீர்மட்டம் 120 அடியாக நீடிக்கிறது.
காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை தொடர்கிறது. மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1.75 லட்சம் கனஅடியாக இருப்பதால் மேட்டூர் அணையின் வலது மற்றும் இடது கரையில் நீர்வளத் துறை அதிகாரிகள், பணியாளர்கள் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். மேலும் ஒருமணி நேரத்திற்கு ஒரு முறை நீர்வரத்து மற்றும் திறப்பு குறித்துக் கணக்கிடப்பட்டு வருகிறது.