மணப்பாறையில் நடைபெற்ற நகர்மன்ற தலைவருக்கான மறைமுகத் தேர்தலில் 7-வது நகர்மன்ற தலைவர் பதவியை திமுக கைப்பற்றி மீண்டும் நகர்மன்றத்தை திமுக தரப்பில் தக்க வைத்துள்ளது. நகர்மன்ற தலைவராக கீதா ஆ.கைக்கேல்ராஜ் தேர்வாகியுள்ளார்.
திருச்சி மாவட்டம் மணப்பாறையில் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற 27 உறுப்பினர்கள் கொண்ட நகர்மன்றத்தின் தலைவர் தேர்தலில் கட்சி மாறி வாக்களித்த சம்பவத்தைத் தொடர்ந்து, மொத்தமுள்ள 27 உறுப்பினர்களில் தன்வசம் 16 உறுப்பினர்களை கொண்ட திமுக வெறும் 12 வாக்குகளை பெற்று 53 ஆண்டுகளுக்கு பிறகு நகர்மன்ற தலைவர் பதவியை இழந்தது. அதனைத்தொடர்ந்து நடைபெற்ற துணைத்தலைவருக்கான மறைமுகத் தேர்தல், நிர்வாகக் குழு உறுப்பினர்களின் தேர்தல் ஆகியவற்றை திமுகவினர் புறக்கணித்த நிலையில் மூன்று முறை நடைபெற்ற தேர்தல்கள் ஒத்துவைக்கப்பட்டன.
இதையும் படிக்க.. விபத்தில் சிக்கிய சைரஸ் மிஸ்திரி வந்த காரின் அதிர்ச்சி தரும் வேகம்
இந்நிலையில் இன்று காலை நடைபெற்ற நகர்மன்ற தலைவருக்கான மறைமுகத்தேர்தலுக்கு திமுக 17, அதிமுக 10 என்ற எண்ணிக்கையில் உறுப்பினர் அரங்கிற்கு வந்திருந்தனர். லால்குடி கோட்டாட்சியர் ச.வைத்தியநாதன், மணப்பாறை நகராட்சி ஆணையர் எஸ்.என்.சியாமளா ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற மறைமுக தேர்தலில் 25-வது வார்டு உறுப்பினர் கீதா ஆ.மைக்கேல்ராஜ் திமுக தரப்பிலும், 27-வது வார்டு உறுப்பினர் எஸ்.ராமன் அதிமுக தரப்பிலும் வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர். இதில் திமுக வேட்பாளர் கீதா ஆ.மைக்கேல்ராஜ் 18 வாக்குகள் பெற்று 7-வது நகர்மன்றத்தின் தலைவராக அறிவிக்கப்பட்டார். அதிமுக 8 வாக்குகள் மட்டுமே பெற்றது. ஒரு வாக்கு செல்லாதவையாக அறிவிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து தனது கோட்டையை நழுவ விட்ட திமுக மீண்டும் அரியணையை தக்க வைத்துள்ளது.