தமிழகத்தில் 4 முதல்வர்கள்! இ.பி.எஸ். பேச்சு

தமிழகத்தில் குடும்ப ஆட்சி நடப்பதாகவும் 4 முதல்வர்கள் இருப்பதாகவும் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். 
எடப்பாடி கே.பழனிசாமி
எடப்பாடி கே.பழனிசாமி

தமிழகத்தில் குடும்ப ஆட்சி நடப்பதாகவும் 4 முதல்வர்கள் இருப்பதாகவும் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். 

மின் கட்டணத்தை உயர்த்தி மக்களை பெரும் துன்பத்திற்கு ஆளாக்கியுள்ள திமுக அரசைக் கண்டித்தும், அறிவிக்கப்பட்டுள்ள மின் கட்டண உயர்வை உடனடியாக திரும்பப் பெற வலியுறுத்தியும் அதிமுக சார்பில் இன்று தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. அனைத்து மாவட்டங்களிலும் மாவட்டச் செயலாளர்கள் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்து வருகிறது. 

முன்னதாக, தமிழகத்தில் புதிய மின் கட்டண உயர்வு கடந்த செப். 10 முதல் அமலுக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

செங்கல்பட்டு மாவட்ட அதிமுக சார்பில் மின் கட்டண உயர்வை கண்டித்து செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையம் அருகில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்.

மாவட்டச் செயலாளர்கள் சிட்லபாக்கம் ராஜேந்திரன், திருக்கழுக்குன்றம் எஸ். ஆறுமுகம், எம்எல்ஏ மரகதம் குமரவேல் ஆகியோர் தலைமையில் முன்னாள் அமைச்சர் டி.கே.எம். சின்னையா, தன் சிங், கே.என் ராமச்சந்திரன், முன்னாள் எம்எல்ஏக்கள் தனபால், தண்டரை கே. மனோகரன், கணிதா சம்பத், நகரச் செயலாளர் செந்தில்குமார், முரளி எம் சுரேஷ் உள்ளிட்ட நிர்வாகிகள் முன்னிலையில் நடைபெற்றது.

திராவிட முன்னேற்றக் கழக தலைமையிலான தமிழக அரசு கடந்த சில நாட்களுக்கு முன்பு, 8 ஆண்டுகளுக்குப் பிறகு மின்சாரக் கட்டணத்தை உயர்த்தியது. இதற்கு எதிர்க்கட்சிகள் சார்பில் கடுமையான கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் போராட்டம் நடைபெறும் என அக்கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடிக்கு பயனுச்சாமி அறிவித்திருந்த நிலையில் செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையத்தில், திமுக அரசின் மின் கட்டண உயர்வைக் கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் முதல்வரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி கண்டன உரையாற்றினார். 

அப்பொழுது பேசிய அவர், 'தமிழகத்தில் குடும்ப ஆட்சி நடக்கிறது.  இப்போது தமிழகத்திற்கு நான்கு முதலமைச்சர்கள் இருக்கிறார்கள். அவர்களது குடும்பம் அதிகார மையமாக மாறியுள்ளது. முதல்வரின் மனைவி, மகன், மருமகன் தான் தமிழகத்தை ஆட்சி செய்கின்றனர். மு.க.ஸ்டாலின் ஒரு பொம்மை முதல்வராக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். 

திராவிட முன்னேற்றக் கழக அரசின் குடும்ப ஆட்சி காரணமாக மக்களுக்கு எந்தவித நன்மையும் ஏற்படவில்லை. கமிஷன், கலெக்ஷன், கரப்ஷன் ஆகியவை தான் இந்த ஆட்சியில் இருந்து வருகிறது. திராவிட மாடல் ஆட்சி என்று சொல்லிக் கொண்டு மக்களை ஏமாற்றி வருகின்றனர்.

மேலும், திமுக ஆட்சியில் தமிழகத்தில் எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை, திருட்டு, வழிப்பறிதான். திமுக அரசின் 15 மாத ஆட்சியில் தமிழக மக்களுக்கு எந்த நன்மையையும் கிடைக்கவில்லை. துன்பமே கிடைத்துள்ளது.

திமுக ஆட்சியில் மக்களுக்கு கிடைத்த முதல் போனஸ் சொத்து வரி உயர்வு. இப்போது மின் கட்டணத்தை உயர்த்தி மக்கள் மீது சுமையை ஏற்படுத்தியிருக்கிறார் முதல்வர். திமுக ஆட்சியில் அனைத்துத் துறைகளிலும் ஊழல் தலைவிரித்தாடுகிறது' என்று பேசியுள்ளார்.  

மேலும், 'செங்கல்பட்டு மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான, செங்கல்பட்டு தலைமை இடமான கொண்டு மாவட்டத்தை உருவாக்கியது அதிமுக அரசு. பாலாற்றில் பல ஆண்டுகளுக்கு கழித்து அதிமுக அரசுதான் தடுப்பணைகள் கட்டியிருந்தது.

ஒரு புதிய மாவட்டம் உருவாக்க வேண்டும் என்றால் சுமார் ரூ.200 கோடி அளவிற்கு செலவாகும், ஆனாலும் வளர்ச்சிக்காக மக்கள் கோரிக்கையை நிறைவேற்றிய அரசு அதிமுக, மாவட்ட ஆட்சியரகம் மற்றும் மாவட்ட கண்காணிப்பாளராகம் ஆகிய பணிகள் 90% முடிந்துள்ளன.

செங்கல்பட்டு மாவட்டம் ஏரிகள் நிறைந்த மாவட்டம், கொளவாய் எரி ரூ.60 கோடி மதிப்பெட்டி பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதேபோல மதுராந்தகம் ஏரிக்கு ரூ. 120 கோடி மதிப்பீட்டில் தூர் வாருவதற்கு அரசாணை வெளியிட்டு தற்போது வேலையைத் துவங்கி உள்ளனர். அதிமுக ஆட்சியில் தமிழக முழுவதும் குடிமராமத்து பணியில், 6000 ஏரிகள் தூர்வாரப்பட்டுள்ளது. 

ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு அமைந்தவுடன் முதல் போனஸாக சொத்துவரி உயர்த்தப்பட்டது. குடிசை வீடுகளுக்குக்கூட வரி போட்டது இந்த ஆட்சியாகத்தான் இருக்கும். இப்பொழுது மக்களுக்கு இரண்டாவது போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. அதுதான் மின்கட்டண உயர்வு. பொங்கல் என்றாலே திராவிட மாடல் ஆட்சி தான் நினைவுக்கு வருகிறது. திமுக பொங்கலுக்கு கொடுக்கப்பட்ட வெல்லம் தரமற்ற முறையில் இருந்தது. கடுகுக்கு பதில் இலவம் பஞ்சு விதைகள் கொடுத்திருந்தார்கள். அரிசியில் வண்டு, பல்லி என பொங்கல் தொகுப்பில் முறைகேடு செய்திருந்தது செய்தியாக வெளிவந்த உண்மை.

சமீபத்தில் செய்தியாளரை சந்தித்திருந்த சுகாதாரத் துறை அமைச்சர் பேசுகையில், நீட் தற்கொலைக்கு அதிமுக அரசுதான் காரணம் எனப் பேசி இருந்தார். இது முற்றிலும் தவறு. காங்கிரஸ் மற்றும் திராவிட முன்னேற்றக் கழக அரசு ஆட்சி செய்த பொழுதுதான், 2010 ஆம் ஆண்டு நீட் குறித்த அறிவிப்பு வெளியிட்டது. அப்பொழுது திமுக எதிர்க்காமல் இருந்தது. அப்போது, அதிமுகவின் பொதுச் செயலாளராக இருந்த ஜெயலலிதா எதிர்ப்பு தெரிவித்து இருந்தார். ஆரம்பம் முதலே நீட் தேர்வுக்கு எதிராக அதிமுக இருந்து வருகிறது.

தற்பொழுது போதைப் பொருள்கள் சர்வதேச சாதாரணமாக கிடைக்கிறது. தமிழக அமைச்சர் தற்போது செய்தியாளர்களை சந்தித்தபோது வெளிமாநிலங்களில் இருந்துதான் கஞ்சா தமிழ்நாட்டுக்கு வருவதாக தெரிவிக்கின்றனர். காவல்துறை மற்றும் உளவுத்துறையை கையில் வைத்திருக்கும் திமுக அரசுதான் இதை தடுக்க வேண்டும், ஆனால் அவர்கள் மத்திய அரசின் மீது குற்றம் சாட்டுகின்றனர். பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோர் கஞ்சா விற்பனை செய்கிறார்கள் என அவர்களே தெரிவிக்கின்றனர், அதில் 146 பேர் மட்டுமே கைது செய்யப்பட்டுள்ளனர். கஞ்சாவை விற்பதே அவர்கள் தான், வேலியே பெயரை மேய்ந்த கதையாக உள்ளது. காவல்துறைக்கு கஞ்சா விற்பவர்கள் யார் என தெரிகிறது, ஆனால் அவர்களை கைது செய்ய முடியவில்லை.

அதிமுக ஆட்சியில் இருந்தபோது ஆன்லைன் ரம்மி தடை செய்யப்பட்டது, ஆனால் ஆன்லைன் ரம்மி வியாபாரிகள் இது குறித்து நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். அப்போது, திமுக ஆட்சி அமைந்தது. ஆன்லைன் ரம்மியை தடை செய்ய வேண்டும் என்பதற்கு முறையான ஆவணங்கள் மற்றும் காரணங்களை முன்வைக்காத காரணத்தினாலே ஆன்லைன் ரம்மி தடையை நீதிமன்றம் ரத்து செய்தது. ஆன்லைன் ரம்மி குறித்து  கருத்து கேட்கும் ஆட்சி திமுக ஆட்சியாகத்தான் இருக்கும். எத்தனை சீட்டு வைத்து ரம்மி ஆடுவது அல்லது வீடு வாசல், நிலம் சொத்துக்களை இழந்து வறுமையில் வாழ்வது குறித்து கருத்து கேட்பாரா?' என்று கேள்வி எழுப்பினார். 

அதிமுகவிற்கு எதிராக அறிக்கை விட்டிருந்த பண்ருட்டி ராமச்சந்திரனை எடப்பாடி பழனிசாமி மேடையிலேயே கடுமையாக விமர்சனம் செய்தார்.

இது குறித்து பேசுகையில், 'அதிமுக பொதுச் செயலாளராக இருந்த ஜெயலலிதாவையே விமர்சித்தவர் பண்ருட்டி ராமச்சந்திரன். அதன்பிறகு பாட்டாளி மக்கள் கட்சிக்கு சென்று சட்டப்பேரவை உறுப்பினராகி யானையின் மீது சென்றார். அதன்பிறகு தேமுதிகவிற்கு சென்று எம்எல்ஏவானார். இப்படிச் சென்ற கட்சிகள் எல்லாம் என்னவாகியது. அதனால் உங்களது அறிவுரை எங்களுக்கு தேவையில்லை. தயவு செய்து குறை கூறாமல் இருங்கள், இல்லையென்றால் சென்று விடுங்கள். நீங்கள் கட்சியின் கிளைச் செயலாளராக இருப்பதற்குக்கூட தகுதியற்றவர் என கடுமையான விமர்சனத்தை எடப்பாடி பழனிசாமி முன் வைத்தார். 

இந்த போராட்டத்தில் நிர்வாகிகள் யஷ்வந்த் ராவ், மறைமலைநகர் கோபி கண்ணன், கஜா என்கின்ற கஜேந்திரன், திருக்கழுக்குன்றம் வேலாயுதம் மாமல்லபுரம் பேரூராட்சித் தலைவர் வளர்மதி எஸ்வந்த் ராவ், ஊராட்சி மன்றத் தலைவர் காயத்ரி தனபால் உள்ளிட்ட மாவட்ட நகர ஒன்றிய பேரூர் நிர்வாகிகள், தொண்டர்கள் என இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட தொண்டர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 

இதனால் காவல் துறையினர் 2 மணி நேரத்திற்குமேல் போக்குவரத்தை மாற்றியமைத்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com