அதிவேகமாக வாகனம் இயக்கி விடியோ வெளியிட்ட யூடியூபர் டிடிஎஃப் வாசன் என்பவர் மீது கோவை காவல்துறையினர் வழக்குபதிவு செய்துள்ளனர்.
யூடியூபில் ’பைக் ரைடிங்’ எனும் நீண்டதூர பயணத்தில் ஈடுபட்டு அதன் விடியோக்களை வெளியிட்டு பிரபலமடைந்தவர் டிடிஎஃப் வாசன். இவர் அண்மையில் வெளியிட்ட விடியோ அவரை தற்போது சிக்கலுக்குள்ளாக்கியுள்ளது.
சக யூடியூபரான ஜிபி முத்துவுடன் இவர் மேற்கொண்ட பயணத்தில் அதிவேகமாக சென்றது மட்டுமல்லாது தனது இரு கைகளையும் விட்டு வாகனத்தை இயக்கியிருந்தார். இந்த விடியோக்கள் சமூக வலைத்தளத்தில் வெளியான மிகுந்த விமர்சனத்தை உண்டாக்கியது. சாலை பாதுகாப்பு எனும் நோக்கத்தையே கெடுக்கும் வகையில் ஆபத்தான பயணத்தை மேற்கொண்டதற்காக இவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட வேண்டும் என குரல்கள் எழுந்தன.
இந்நிலையில் வாகனத்தை அதிவேகமான இயக்கிய புகாரின் அடிப்படையில் கோவை காவல்துறையினர் டிடிஎஃப் வாசன் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
முன்னதாக கடந்த சில மாதங்களுக்கு முன் தன்னுடைய ரசிகர்கள் உடனான சந்திப்பில் டிடிஎஃப் வாசனுக்கு கூடிய கூட்டம் அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது குறிப்பிடத்தக்கது.