அதிமுக பொதுச் செயலாளராக தன்னை அங்கீகரிக்க கோரிய எடப்பாடி பழனிசாமியின் மனு மீது இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் நாளை ஆலோசிக்கிறார்.
அதிமுக பொதுக்குழு முடிவுகளை தேர்தல் ஆணையம் அங்கீகரிக்க கோரி எடப்பாடி பழனிசாமி அளித்த மனுவின் மீது முடிவெடுக்காமல் இந்திய தேர்தல் ஆணையம் காலதாமதம் செய்து வந்தது.
இதனைத் தொடர்ந்து தில்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த எடப்பாடி பழனிசாமி, கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக போட்டியிட விரும்புவதால், கட்சியின் சின்னம் குறித்து முக்கிய முடிவெடுக்க வேண்டும். எனவே, பொதுச் செயலாளராக தன்னை அங்கீகரிக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக் கோரினார்.
இந்த வழக்கை விசாரித்த தில்லி உயர்நீதிமன்றம், 10 நாள்களுக்கு தேர்தல் ஆணையம் முடிவெடுக்க அறிவுறுத்தி வழக்கை முடித்து வைத்தது.
தில்லி உயர்நீதிமன்றம் கடந்த 12-ஆம் தேதி உத்தரவிட்ட நிலையில், இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தலைமையிலான குழுவினர் புதன்கிழமை ஆலோசனையில் ஈடுபடுகின்றனர்.