காவிரி ஆற்றில் மீன்பிடிக்க வெடி மருந்து வீசியதில் இளைஞர் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காவிரி ஆற்றில் வெடிமருந்து வீசிய பெருமாளை பூலாம்பட்டி காவல் துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சேலம் மாவட்டம் எடப்பாடி அடுத்த பூலாம்பட்டி காவிரி ஆற்றில் அப்பகுதி மீனவர்கள் வெடிவைத்து மீன்களைப் பிடித்து விற்பனை செய்து வருவது வழக்கம்.
இந்த நிலையில் பள்ளியபாளையத்தைச் சேர்ந்த ராஜமாணிக்கம் மகன் பூபதி தனது நண்பரான பள்ளிபாளையம் ஆவரங்காட்டைச் சேர்ந்த முருகன் மகன் மோகன்குமாருடன், பூலாம்பட்டி அருகே உள்ள ஆணைபுலிக்காடு பகுதியில் உள்ள மாதையன் சித்தப்பா வீட்டிற்கு வந்துள்ளார். சம்பவத்தன்று நேற்று மாலை ஆறு மணியளவில் சித்தப்பா வீட்டிற்கு அருகே உள்ள காவிரி ஆற்றில் பூபதி மற்றும் மோகன் குமார் குளிப்பதற்காக சென்றுள்ளனர்.
அப்போது மோகன் குமார் குளித்துக் கொண்டிருக்கும் பொழுது பூபதி பாறை மீது நின்று கொண்டு இருந்துள்ளார். அப்போது, அதே பகுதியில் மீன் பிடிப்பதற்காக வந்த கந்தசாமி மகன் பெருமாள் (45)பாறை வெடி மருந்து தோட்டாவை, காவிரி ஆற்றினுள் வீசிய போது, வெடிமருந்து வெடித்ததில், தண்ணீரில் மூழ்கி குளித்துக் கொண்டிருந்த, மோகன் குமார் என்பவருக்கு பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
அங்கு பாறை மீது நின்று கொண்டிருந்த பூபதி பூலாம்பட்டி காவல் துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளார். அங்கு விரைந்து வந்த காவல் துறையினர் மோகன் குமாரின் பிரேதத்தை கைப்பற்றி எடப்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வெடி வைத்த பெருமாளை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.